பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

27

பிரிட்டிஷ் கப்பலை ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் தாக்கி அழித்தது பற்றியும், அதனால் பலர் மாண்டது பற்றியும் கூறக்கேட்ட முதியவர் கொதித்துச் சபிக்கிறார். 'ஜெர்மானியர் நாசமாகப் போகட்டும்! ஆழ்நரகில் வீழட்டும்' என்று. 'ஏனப்பா இப்படி பகை உணர்ச்சி. நமது வேதம் இதனை அனுமதிக்காது. பகைவனிடமும் பச்சாதாபம் காட்டச் சொல்லுகிறது என்று முன்பு சொல்வீரே, நினைவில்லையா?' என்று கேட்டுவிடுகிறாள் மோனா! முதியவர் திகைக்கிறார். 'மகளே! என்ன இது! இவ்விதம் பேசுகிறாய்! உன் போக்கே மாறிவிட்டிருக்கிறதே! எப்படி? எதனால்?' என்று கேட்கிறார்.

அவளுக்கே புரியவில்லை அந்தக் காரணம்! முதியவர் கேட்கிறார்; பதில் என்ன தருவாள்.

மோனா, முதியவர் மனதில் குடியேறிவிட்டாளோ?

முதியவர், மோனா மனதிலே இடம் பெற்று விட்டாரோ!

முதியவரின் முன்னாள் மனப்பான்மை இந்நாள் மோனாவுக்கும், முன்னாளில் மோனா கொண்டிருந்த மனப்பான்மை இதுபோல முதியவருக்கும் அமைந்து விட்டதோ! விந்தை! ஆனால் காரணம்?

ஜெர்மானியரின் அட்டூழியம் பற்றிய செய்திகளைப் படிக்கிறார் முதியவர்; அவர் உள்ளத்திலே மூண்டுகிடந்த வெறுப்புணர்ச்சி மேலும் தடித்துக் கொண்டிருக்கிறது.

அதே இதழ்களில், போர்ச் சூழ்நிலையிலும், இதயம் படைத்தவர்கள் நற்செயல் சில புரிகின்றனர் என்பதற்கான செய்திகள் வெளிவருகின்றன. மோனா அதைப் படித்துப் பார்க்கிறாள். ஏற்கனவே மெள்ள மெள்ள அவள் உள்ளத்திலிருந்து கலைந்து கொண்டிருந்த வெறுப்புணர்ச்சி மேலும் கலைகிறது.