பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

இரும்பு

எப்போது கலையத் தொடங்கிற்று அந்த வெறுப்புணர்ச்சி? ஆஸ்க்கார் எனும் ஜெர்மானியனைக் கண்ட நாள் தொட்டு; அவன் பேச்சிலே குழைந்திருந்த பாசத்தை உணர்ந்த நாள் முதல்.

ஜெர்மானியரின் பாசறைப் பகுதியில், பலத்த அடிபட்ட பிரிட்டிஷ் போர் வீரனொருவன் தப்பிச் செல்ல முயற்சிக்கிறான். துரத்திப் பிடிக்க வருகின்றனர். ஒரு வீட்டுக்குள் நுழைந்து கொள்கிறான். அது ஒரு ஜெர்மானியன் வீடு!

அந்த வீட்டிலே, ஜெர்மன் படைத் தலைவர்கள் சிலர் விருந்துண்டு களிநடமாடுகின்றனர்.

வீட்டுக்கு உரியவனான ஜெர்மானியன், பிரிட்டிஷ் வீரனைக் கண்டுவிடுகிறான்.

ஒரு குண்டு! ஒரு அலறல்! ஒரு பிணம்! பிறகு கைதட்டல், பாராட்டு, வீரப்பதக்கம்!! - இப்படித்தான் நிகழ்ச்சி வடிவம் கொண்டிருக்க வேண்டும். அதுபோல நடக்கவில்லை.

உயிருக்குப் பயந்து ஒளிந்து கொள்ள வந்த பிரிட்டிஷ் படை வீரனை, அந்த ஜெர்மானியன் பிடித்து மேலிடம் ஒப்படைக்கக்கூட இல்லை. ஜெர்மன் தளபதிகள் கண்களில் பட்டுவிடாதபடி மறைந்து கொள்ள வழிசெய்து தருகிறான். அந்தத் தளபதிகள் சென்றான பிறகு, பிரிட்டிஷ் வீரனைத் தப்பி ஓடிவிடும்படிச் சொல்லுகிறான்!

பிரிட்டிஷ் வீரன் உயிரை ஜெர்மானியன் காப்பாற்றுகிறான்! தீராத பகை! ஓயாத போர்! பயங்கரமான பழி வாங்கும் உணர்ச்சி! எங்கும் வெறுப்புணர்ச்சி கப்பிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஒரு ஜெர்மானியன் இதயம் படைத்தவனாகிறான்; இரக்கம் காட்டுகிறான்; பகைவனுக்கே துணை செய்கிறான்.

இந்தச் செய்தியை மோனா இதழிலிருந்து முதியவருக்குப் படித்துக் காட்டுகிறாள்.