பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முள்வேலி

31

அவன், ஆஸ்க்காருக்குப் பள்ளித் தோழன்! விவரம் தெரிந்துகொண்டு அந்தக் கைக்கடிகாரத்தை ஆஸ்க்காருக்கு அனுப்பி வைக்கிறான். 'ராபியின் தங்கையிடம் கொடுத்து விடு. அதுதான் ராபியின் கடைசி விருப்பம் என்பதைக் கூறு' என்று.

ஆஸ்க்கார் இந்தத் தகவலையும் கைக்கடியாரத்தையும் மோனாவிடம் கொடுக்கிறான். அவள் மனம் பாகாய் உருகிவிடுகிறது.

கடும்போர் நடைபெறும் களத்திலே கூட இப்படி ஒரு நட்புணர்ச்சி பூத்திட முடிந்ததே!

ஒரே பதுங்குமிடத்தில் அடிபட்ட இருவர்; ஒருவர் ஜெர்மானியர்; மற்றவர் பிரிட்டிஷ்.

அவர்கள் வெட்டிக் கொள்ளவில்லை. சுட்டுக் கொள்ளவில்லை; ரணப் படுக்கையிலே வீழ்ந்து விட்டிருந்த அந்த இருவரும் நட்புணர்ச்சி பெற்றனர்.

இந்த மனிதத் தன்மை தான் இயற்கையானது.

போர், இந்த இயற்கையான பண்பை அழித்து விடுகிறது.

ஒருவரிடம் ஒருவர் நட்புணர்ச்சி காட்டிடப் பிறந்த மக்களை, ஒருவரை ஒருவர் சுட்டுத் தள்ளிக் கொள்ளச் செய்கிறது; வெறி ஊட்டுகிறது; மனிதத் தன்மையை மாய்க்கிறது போர்! ஏன் தான் போர் மூட்டிக் கொள்கின்றனரோ! என்றெல்லாம் எண்ணி உருகுகிறாள் மோனா.

மோனா ஒரே சமயத்தில் இரண்டு போர் முனைகளில் ஈடுபட வேண்டி நேரிட்டுவிட்டது.

ஒரு முனையில், தன் தகப்பனாரின் உள்ளத்தில் வளர்ந்த வண்ணம் இருந்த வெறுப்புணர்ச்சியைப் போக்கிடப் போரிட வேண்டி இருந்தது. வெற்றி கிட்டவில்லை.