பக்கம்:இறைவர் திருமகன்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

கொடுமையானது என்று எண்ணி எண்ணி நைந்தான்.

உலகைப்புரக்க வந்த உத்தமரைக் காட்டிக் கொடுக்க அவன் ஆசைப்பட்டு வாங்கிய கைக் கூலியான அந்த முப்பது வெள்ளிக் காசுகளும் அவன் பையை மட்டுமல்லாமல் மனச்சாட்சியையும் உறுத்திக் கொண்டிருந்தன. அவற்றைத் தந்த குருமார்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதென்று அவன் முடிவு செய்து விட்டான். அவற்றைத் தான் வைத்துக் கொள்வதோ, செலவழிப்பதோ மேலும் பாவத்தைச் சுமப்பதாகும் என எண்ணினான்.

அதிகாலையில் அவன் குருமார்கள் கூடி யிருந்த அவைக்குச் சென்றான்.

"நான் பாவம் புரிந்து விட்டேன். நல்லவர் ஒருவர்க்கு இரண்டகம் செய்து விட்டேன்" என்று கூவினான்.

"அதனால் எங்களுக்கென்ன வந்தது ?" என்று கேட்டார்கள் அந்தக் குருமார்கள்.

அவன் திருப்பிக் கொடுத்த பணத்தை அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள். மேலும் அவனைக் கடிந்து பழித்துப் பேசினார்கள்.'