பக்கம்:இறைவர் திருமகன்.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

கீழ்த் திசையிலிருந்து வந்த இந்த அறிஞர்களைப் பற்றியும், அவர்கள் மக்களிடம் கூறிய செய்திகளைப் பற்றியும் ஜெருசலத்தின் அரசன் ஹெராடு கேள்விப்பட்டான். ஹெராட் ரோமப் பேரரசின் கீழ் ஒரு சிற்றரசனாக இருந்து வந்தான். இந்தப் பெரிய மனிதர்கள் கூறிய செய்தியைக் கேட்டதும் அவனுக்குக் கோபமும் அச்சமும் உண்டாயிற்று. தனக்கு இருக்கும் சிறிய அதிகாரத்தையும் கைப்பற்றிக் கொள்ள ஓர் அரசன் முளைத்துவிட்டானா என்று எண்ணி அவன் மனங் கலங்கினான்.

ஆலயத்துக் குருமார்களையும், வேதங்களைப் படியெடுத்து எழுதி வைக்கும் எழுத்தர்களையும் கூட்டி வரும்படி ஆணையிட்டான். கிழக்கிலிருந்து வந்த அந்தப் பெரிய மனிதர்கள் கூறும் செய்திக்கு வேதத்தில் ஆதாரம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டான். அவர்கள் பழைய வேத நூல்களை ஆராய்ந்து, யூதர்களின் அரசன் பெத்தலெம் நகரில் பிறப்பான் என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறினார்கள். இதைக் கேட்டதும் ஹெராடு மன்னனின் திகில் மேலும் அதிகமாயிற்று.