பக்கம்:இறைவர் திருமகன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4. சைத்தான் நடத்திய தேர்வு

ஜோர்டான் ஆற்றங்கரையிலே ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

"தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகின் நல்லரசு உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்று அந்த இளைஞன் கூவினான். அவன் குரல் எட்டுத் திசையிலும் பரவியது. சிற்றூர்களிலிருந்தும் நகர்களிலிருந்தும் மக்கள் வந்து குவிந்தார்கள். ஏழைகளும், செல்வர்களும், மீன்பிடிப்பவர்களும், வரி வசூலிப்பவர்களும், ரோமானியப் போர் வீரர்களும் ஜெருசலம் நகரத்து மதவாதிகளும் இந்தப் புதிய போதகனின் சொற்களைச் செவிமடுக்க வந்து கூடினார்கள்.

அந்த இளைஞன் ஒட்டகத்தின் மயிரினால் நெய்யப்பட்ட முரட்டு ஆடையை அணிந்திருந்தான். இடையிலே தோல்வாரினைச் சுற்றிக் கட்டியிருந்தான்.