பக்கம்:இறைவர் திருமகன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

31

"சைத்தானே, பேசாமல் இங்கிருந்து போய்விடு. நான் உன்னை வணங்கப் போவதில்லை. ஏனெனில் உன் கடவுளாகிய இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும், அவன் ஒருவனுக்கே பணிபுரிய வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று இயேசு பதிலளித்தார்.

இனித் தன் ஏமாற்று வேலை எதுவும் பலிக்காதென்று உணர்ந்த சைத்தான் அவரை விட்டு அகன்று விட்டது. தேவகணங்கள் வந்து அவருக்கு ஊழியம் செய்தன.

ஜானைச் சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அறிந்த இயேசு கலீலீ நகருக்குப் புறப்பட்டார்.

கலீலீ கடற்கரையின் ஓரமாக நடந்து செல்லும் போது இயேசு இரண்டு மீனவர்களைக் கண்டார். பீட்டரும் அவன் உடன் பிறந்தானாகிய ஆண்ட்ரூவும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்து, “என்னைத் தொடர்ந்து வாருங்கள். மனிதர்களை வசப்படுத்துபவர்களாக உங்களை ஆக்குகிறேன்” என்றார் இயேசு.