பக்கம்:இறைவர் திருமகன்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

"பீட்டர், நான் இப்போது சொல்லுகிறேன். காலைச் சேவல் கூவு முன்னால் இன்றிரவிலே என்னைத் தெரியவே தெரியாதென்று மூன்று முறை கூறப்போகிறாய்" என்று அவனை உற்று நோக்கியவாறு உரைத்தார் இயேசு நாதர்.

"பெருமானே, தங்களோடு சேர்ந்து சாக நேரிட்டாலும், நான் உங்களை மறுத்துரைக்க மாட்டேன்" என்று உறுதி நிறைந்த குரலில் கூறினான் பீட்டர். அதுபோலவே மற்ற பத்துச் சீடர்களும் உறுதி கூறினார்கள்.

நடந்துகொண்டிருந்த இயேசுநாதர் ஓரிடத்தில் நின்றார். "நண்பர்களே நீங்கள் இந்த இடத்தில் இருங்கள். நான் சிறிது அப்பால் சென்று தொழுகை செய்துவிட்டு வருகிறேன்" என்றார். எட்டுச் சீடர்கள் அங்கேயே நின்று கொண்டார்கள், பீட்டர், ஜேம்ஸ், ஜான் என்ற மூவர் அவரைத் தொடர்ந்து நடந்தார்கள்.

மற்றும் ஓர் இடத்தில் அவர்களை நிறுத்தினார் அவர். "நீங்கள் இங்கேயே இருந்து என்னைக் கவனித்துக் கொண்டிருங்கள்" என்று கூறிவிட்டுச் சிறிது தொலை சென்றார்.