பக்கம்:இலக்கண வரலாறு.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

ஆ. சேனாவரையம்

சேனாவரையர் என்பது பட்டப்பெயர். எட்டி, காவிதி என்னும் பட்டங்கள் போல் படைத்தலைவர்களுக்கு அரசால் வழங்கப்பட்ட பட்டப்பெயர் அது. அதனால் சேனாவரையரின் முன்னோருள் ஒருவர் அப்பட்டப் பெயர் பெற்று விளங்கி அது குடிப்பெயராகப் பின்னர் விளங்கியிருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.

அரையர் — அரசர்; ‘சேனை அரையர்’ என்பது சேனாவரையர் ஆயது. சேனைமுதலி, தளவாய் முதலி, நாயகர், தலைவர் என்னும் குடிவழிப் பெயர்களின் வரலாற்றை அறிந்தால் சேனாவரையர் என்பதன் பொருள் தெளிவாகும்.

ஊரும் காலமும்:

தூத்துக்குடி திருச்செந்தூர்ப் பெருவழியில் ஆற்றூர் என்றோர் ஊர் உள்ளது. அவ்வூர் பொருநையாற்றின் கரையில் அமைந்தது. அவ்வூரிலுள்ள சோமநாதர் கோயிலில் மாறவர்மன் குலசேகரனின் ஏழாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுள்ளது. அதில் ஆற்றூர்ச் சேனாவரையர் தம் முன்னோரிடமிருந்து தமக்குக் கிடைத்த நிலங்களைச் சோமநாதர் கோயிலுக்கு வழங்கிய செய்தி உள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1276 என்பர். அதனால் சேனாவரையர் பதின்மூன்றாம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம்,

ஆற்றூர் ஏரல், கொற்கை சார்ந்த ஊர். கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியனைச் சிலம்பு பாடுகின்றது. அக்கொற்கையில் நாணயம் அடிக்கும் அக்கசாலை இருந்தது. இன்றும் அவ்விடம் ‘அக்கா சாலை’ என வழங்குகின்றது. ஆங்கிருந்த கோயில் ‘அக்கசாலை ஈசுவரர் கோயில்’ என்பதை அக்கோயில் கல்வெட்டுக் கூறுகின்றது. செழிய நங்கை கோயில் என்பதொன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/133&oldid=1471492" இலிருந்து மீள்விக்கப்பட்டது