பக்கம்:இலக்கண வரலாறு.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

“உலக வழக்காவது சூத்திர யாப்புப்போல மிகைச் சொற்படாமைச் சொல்லப்படுவதொன்றன்றி, மேற்றொட்டுங் கேட்டார்க்குப் பொருள் இனிது விளங்க வழங்கப்பட்டு வருவது".

உலக வழக்கை விளக்கும்போதே, சூத்திர யாப்பு இத்தகைத் தெனவும் சொல்லி இரு வழக்கையும் விளக்கும் அருமையது இது.

இரண்டன் வேறுபாடுகளை விளக்கிக் காட்டலிலும் விழிப்போடு இருக்கிறார் சேனாவரையர்.

"இனத்தொடு சார்பிடை வேற்றுமை என்னை எனின் ஒரு சாதிக்கண் அணைந்த சாதி இனமெனப்படும். அணைந்த சாதியன்றி ஒருவாற்றான் இயைபுடையது சார்பெனப்படும் என்பது." (53)

“குறிப்பு—மனத்தாற் குறித்துணரப்படுவது;

பண்பு — பொறியான் உணரப்படும் குணம்” (297) —இத்தகையவை அவை.

“ஈண்டு இரட்டைக் கிளவி என்றது மக்களிரட்டை விலங்கிரட்டை போல வேற்றுமையுடையவற்றையன்றி இலையிரட்டையும் பூவிரட்டையும் போல ஒற்றுமையும் வேற்றுமையும் உடையனவற்றை", என்பது போன்ற இடங்களில் இலக்கணத்தை இலக்கியச் சுவைபடச் செய்யும் நேர்த்தியராகச் சேனாவரையர் விளங்குகின்றார். |

தொல்காப்பிய உரையாசிரியர்களுள் சேனாவரையரை மிக மிகப் போற்றியவர் சிவஞானமுனிவரர். “வடநூற் கடலை நிலை கண்டுணர்ந்த சேனாவரையர்" எனப்பாராட்டும் முனிவரர், “எழுத்ததிகாரத்திற்கு உரை செய்தார் ஆயின் இன்னோரன்ன பொருளனைத்தும் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்து உரைப்பர்” என்றும் தொடர்ந்து எழுதுகின்றார் (தொல்காப்பிய சூத்திர விருத்தி).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கண_வரலாறு.pdf/144&oldid=1471503" இலிருந்து மீள்விக்கப்பட்டது