187
“பாணன் சூடான் பாடினி அணியாள்” (புறம். 242)
வாடா மாலை பாடினி அணிய " (புறம். 364)
எனச் சங்கச் சான்றோர் பயில வழங்குகின்றனர்.
காக்கையை நோக்கி'விருந்து வரக் கரைவாய்' என்று பாடிய பெண்பாற் புலவர் ஒருவர் நச்செள்ளையார். அவரைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்றது சங்கத் தமிழ் உலகு (குறுந். 210). அவர் பெயர் வழிவழியாகச் சூட்டப் பெற்ற பெருமையால் பெயர் பெற்றவர், இக்காக்கைபாடினியாரும், சிறு காக்கை பாடினியாரும் எனலாம்.
“காக்கையைப் பாடியமையால் 'காக்கை பாடினியார்' எனப்பட்டார்; குடிப்பிறப்புக் குறிப்பதாகாது பாடினியார்” என்பது எனின், கோடை பாடிய பெரும் பூதனார், நோய்பாடியார், பாலை பாடிய பெருங்கடுங்கோ, பாரதம் பாடிய பெருந்தேவனார், மருதம் பாடிய இளங்கடுங்கோ என்று வரும் பெயர்களை நோக்கித் தெளிக.
காக்கைபாடினிய நூற்பாக்களும் குறிப்புகளும் தொல்காப்பிய உரைகளிலும், நன்னூல் மயிலைநாதருரை, களவியலுரை, வீரசோழியவுரை ஆகியவற்றிலும் அருகிக் காணப்படுகின்றன. யாப்பருங்கலக் காரிகையுரை யாப்பருங்கல விருத்தியுரை ஆகியவற்றில் மிகப் பலவாக எடுத்தாளப்பட்டுள்ளன.
பாயிரம்
காக்கைபாடினியச் சிறப்புப் பாயிரம் முற்றாகக் கிடைக்கவில்லை எனினும் நான்கடிகள் களவியலுரை, யாப்பருங்கல விருத்தியுரை ஆயவற்றால் கிடைக்கின்றன:
“வடக்கும் தெற்கும் குணக்கும் குடக்கும்
வேங்கடங் குமரி தீம்புனற் பௌவமென்
றந்தான் கெல்லை அகவயிற் கிடந்த
நூலதின் உண்மை வாலிதின் விரிப்பின்”