xxxv
“அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே”
(தொல். 102)
என்பவற்றை அறிக. தமக்கு முன்னரே 'நரம்பின் மறை' (இசை நூல்) தனித்திருந்தமையும் 'அந்தணர் மறை' தனித்திருந்தமையையும் அவற்றை இவண் கூறவில்லை என்றும் கூறியமையையும் தெளிக.
இனி, வெளிப்படத் தெரிந்த வகையான் தமிழ் இலக்கணம் முக்கூறு பட நடந்தது என்பதே.
தொல்காப்பியம் வழக்கும் செய்யுளும் ஆய்ந்து செய்த நூலாகலின், அந்நூலுக்கு முந்து நூல்களும் அம்முக்கூறு பட நடந்தன என்பதே உண்மையாம்.
பொருளதிகாரம் வாழ்வியல் கூறு மல்கியது. விரிவுக்கு இடனாகியது. செய்யுளியல் பொருளதிகாரப் பரப்பில் மிகப் பெரியது. அச்செய்புளியலை மட்டும் தனியே வாங்கிக் கொண்டு நூல் செய்யும் வழக்கு, தொல்காப்பியத்திற்கும் யாப்பருங்கலத்திற்கும் இடைப்படப் பெருகியிருந்தமை வெளிப்பட விளங்குகின்றது.
சங்கயாப்பு, பல்காயம், அவிநயம், காக்கை பாடினியம், சிறுகாக்கை பாடினியம், பெரியபம்மம், மயேச்சுரம், நற்றத்தம், பனம்பாரம், பரிமாணம், வாய்ப்பியம், அடிநூல் இன்னவெல்லாம் யாப்பிலக்கண நூல்களே: ஆகலின், செய்யுளியல் தனியே ஓர் இலக்கணமாக - யாப்பாக — வளர்ந்த நிலை இது. ஆதலால், இறையனார் களவியலுரை எழுத்தும் சொல்லும் யாப்பும் வல்லாரைத் தலைப்பட்டும் பொருள் வல்லாரைத் தலைப்படாமை பற்றிக் கூறலாயிற்று. ஆதலால், தொல்காப்பியருக்குப் பின் முதற்கண் யாப்பிலக்கணம் தனியே பிரிந்து நூற்-