பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15
கிள்ளி வளவன்

சோழ நாடு திருமாவளவன் ஆட்சிக்குப் பின் இரு கூறுபட்டு இரு திறத்தாரால் ஆளப்பட்டு வந்தது. அவற்றுள் ஒன்றிற்குப் புகார் தலைநகர். மற்றொன்றிற்கு உறையூர் தலைநகர். சோழன் கரிகாலனுக்குப் பின்னர் உறையூரும் உறையூர்ச் சோழரும் சிறந்து விளங்கினர். உறையூரையாண்ட சோழ அரசர்களுள் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சிறந்தவனாவன். இவன் புலவர் பாராட்டும் புகழுடையவன். “இவன் பேராண்மை பகைவரும் அஞ்சும் தன்மையது. இவன் கை வண்மை மாரியும் தோற்கும் இயல்பினது. இவன் செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடையவன்!” எனப் புலவர் கூறும் பாராட்டுக்கள் பல.

இவனது நாட்டு வளம் குறித்து ஒரு புலவர் மிகவும் நயம்படப் பாடியுள்ளார். நீர் வளம் நிறைந்தமையால் ஒரு பெண் யானை படுத்து உறங்குவதற்காம் நிலம், ஏழு ஆண் யானைகளைக் காப்பாற்ற வல்ல பெரும் உணவினைத் தரும் என்ற பொருள்படும்படி,