பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியங் கண்ட காவலர் 23



நில்லாது, கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவித் தமிழகத்து வளத்தை, வாழ்வை வனப்புடையதாக்கிய காலம். சோழ நாட்டுப் புகாரிலும், பாண்டிய நாட்டுக் கொற்கையிலும், சேர நாட்டு முசிறியிலும் வாணிகம் கருதி வந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் பெருந்திரளாக வாழ்ந்த காலம்.

தமிழ் நாட்டு அரசர்கள், தமிழகத்தின் பெருமை யினைப் பிற நாட்டாரும் உணருமாறு வெற்றி கண்டு வாழ்ந்த காலம் சேரருள் சிறந்த செங்குட்டுவனும், சோழருள் சிறந்த கரிகாற் பெருவளத்தானும், பாண்டியருள் சிறந்த நெடுஞ்செழியனும் ஆட்சி புரிந்த காலம் அது. தமிழ் வேந்தர் கொண்டாடிய விழாவிற்கு இலங்கைவாழ் அரசன் கயவாகுவும், வடநாடு வாழ் நூற்றுவர் கன்னரும் வந்து சிறப்பித்த வளமார் காலம். காவிரியில் கரிகாலன் கட்டிய கரையாலும், கல்லணையாலும், "சோழ வளநாடு சோறுடைத்து” என்ற சொல் பிறக்க வளம் பெருகிய காலம். ஆட்சி நலமும், அரும் பொருள் வளமும், வேலி ஆயிரமாக விளைந்த விளைவுச் சிறப்பும் பெற்றமையால், மக்கள் பசியும், அது காரணமாய்ப் பிணியும், அது காரணமாய்ப் பகையும் அற்று வாழ்ந்த காலம். அன்பும் ஆண்மையும், அருளும் ஆற்றலும், காதலும் கடமையும், உரனும் உடையார் பேரொழுக்கமும் உடையராய் வாழ்ந்த வனப்புமிக்க காலம். ஆன்றவிந்தடங்கிய சான்றோர் பலர், அரசனும், அவன்கீழ் வாழ் மக்களும் அறவழி நடவாது, மறவழி செல்லாது வாழ்வதற்காய