பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 புலவர் கா. கோவிந்தன்



அதைப் போன்றே, ஒர் அரசின் வாழ்வும் தாழ்வும் அவ்வரசினை நடத்துவோர் தம் அறிவு, அறிவின்மை களினாலேயே உண்டாம். அதன் வாழ்வும் தாழ்வும், அதைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தலைவனின் ஆற்றல் ஆற்றலின்மைகளினாலேயேயாம். ஆளும் அரசன் அரசியல் அறிவும், ஆண்மையும் ஆற்றலும் உடையனாயின், எத்துணைச் சீர்கேடுற்ற அரசும் சீர் பெற்று உயரும்; அவ்வரசின் கீழ் வாழும் மக்களும், மனநிறை வாழ்வினராவர். அவனும் நிறை உடையவனாவன்.

சிற்றரசு பேரரசாகிப் பெருமை கொள்வதும், பேரரசு சிற்றரசாகிச் சிதைவதும், அவ்வக் காலங்களில் அவ்வரசியல் தலைமைக்கண் நிற்பார்தம் அறிவு, அறிவின்மைகளினாலேயே ஆகும் என்ற அரசியல் உண்மையினை உலக அரசர்கட்கு உரைக்க வந்த திரையன், உருளையும், பாரும் கோக்கப் பெற்று, எவ்வகை நிலத்தினும் விரைந்தோட வல்ல உறுதி வாய்ந்த வண்டி, அதை ஒட்டுவோன் அத்தொழிலறிந்த உரவோனாய வழி, கேடின்றி ஓடி, உன்னிய இடம் சென்று அடையும்; வண்டி ஒட்டும் வன்மை அதை ஒட்டுவோன்பால் இன்றாயின், அவ்வண்டி நெறியல்லா நெறி சென்று, சேற்றிலும் மணலிலும் சிக்கிச் சீரழியும் என ஒடும் வண்டியின் இயல்புரைப்பான்போல், உலக அரசுகளின் உண்மை யியல்பினை உள்ளவாறு உரைத்துள்ளான். இக் கருத்தமைந்த பாடல் எட்டுத் தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் உள்ள 185ஆம் செய்யுளாக உள்ளது.