பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
5
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி

சோழன் கரிகாலன் முன்னோர், காற்றின் இயல்பறிந்து கடலில் கலம் ஒட்டக் கற்றிருந்தனர். கரிகாலன், கலம் செலுத்திக் கடல் கடந்து சென்று, ஈழநாட்டை வென்றான். இமயவரம்பன் நெடுஞ்சேர லாதன் கடலிடையே வாழ்ந்து நெருக்கித் திரிந்த கடம்பு மரக் காவலரை வென்று அழித்தான். பழந்தமிழ்ப் பாண்டியன் ஒருவன் உரோம் நாட்டு அரசன் அவைக்கு அரசியல் தூதுவனை அனுப்பியிருந்தான். பண்டைத் தமிழர்கள், மேற்கே எகிப்து, கிரீக், உரோம் முதலாம் நாடுகளோடு வாணிக உறவு மேற் கொண்டிருந்தனர். கிழக்கே சுமத்ரா, ஜாவா, சீனம் முதலாம் நாடுகட்கும் வாணிகம் கருதிச் சென்று வந்தனர். தமிழ் நாட்டுக் கடற்கரைப் பட்டினங்களில் வந்திருந்த யவனர் முதலாம் பிற நாட்டு மக்கள் எண்ணற்றவராவர். இவ்வாறெல்லாம் பழந்தமிழ் நூல்கள் பகரும் சான்றுகளால், கடலில் கலம் செலுத்தி வாழும் வாழ்க்கையினைப் பழந்தமிழ் மக்கள் பண்டே மேற்கொண்டிருந்தனர் என்பது உறுதியாம்.