பக்கம்:இலக்கியங்கண்ட காவலர்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 புலவர் கா. கோவிந்தன்



அடைந்துவிட்டது. கடைச் சங்க காலமே, இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர். அதற்கு முன்னே, ஒவ்வொரு சங்கத்திற்கும் இடையே எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன. அவ்வாறு நோக்கியவிடத்துத் தமிழ்மொழி, தன் இனிய பண்பை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெற்றுவிட்டது என்பது உறுதியாம்.

மக்கள், தங்கள் உள்ளத்தே எழுந்த எண்ணங்களைத், தாங்கள் எண்ணியவாறே, ஏனையோரும் உணருமாறு எடுத்துரைக்க வல்ல சொல் வளமும், கேட்போர் விரும்பிக் கேட்குமாறு அமைந்த சொல்லின்பமும் உடையவாய் அமைந்த ஒரு மொழியில், அழகிய இலக்கியங்கள் பல தோன்றுவதும் இயல்பே. இலக்கியமாவது உயர்ந்த கருத்துக்களைச் சிறந்த சொற்களால் திறம்பட உரைப்பதாம். இனிய பல சொற்களைக் கொண்ட ஒரு மொழி, நாகரிகமும் நற்பண்பும் இல்லா நாட்டு மக்களிடத்தில் தோன்றி விடுவதில்லை. தக்க இன்ன, தகாதன இன்ன என உணரும் உணர்வு தகுதியுடையவரிடத்து மட்டுமே உண்டாம். தகுதியாவது யாது என்பதை உணராதார், ஒலியிலும் மொழியிலும் தகுதியைக் காண இயலாதவர். சிந்தையும் செயலும் சிறந்தனவாகப் பெற்ற மக்கள், தம்மோடு தொடர்புடைய எவையும் சிறந்தனவாக இருத்தலை விரும்புவர்; தாம் வழங்கும் மொழியும் சிறந்ததாதல் வேண்டும் என்ற எண்ணம் அவர்பாலே உண்டாம். ஆகவே, ஒரு மொழியும், அம்மொழியில்