இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இலக்கியச் சாறு
25
மாற்றத்தை நச்சும்போது பழமை புதுக்கவர்ச்சி பெறும். பழமைப்படங்கள் தொலைக்காட்சியில் மீண்டும் திரைப்படுவரை மக்கள் ஆவலோடு களிக்கின்றார்கள் அல்லவா? நம் பண்டையிலக்கியங்கள் காலக்கோட்படாத உத்தியங்கள் கொண்டவை. சில எடுத்துக்காட்டு.
‘பூவிழி வாசலிலே’ என்பது அண்மையில் வந்த அருமைத் திரைப்படம். சிறுகுழந்தையின் ஊமை நடிப்புத் திறம்மிக்க மெய்ப்பாட்டுத் திரைக்கலை இது.இதில் ஒரு சுவையான களம்: இளங்காவலன் ஊமைக் குழந்தையிடம், ஒருவனைச் கட்டிக்காட்டி, இவன் தானே அவர்களைக் குத்திக் கொன்றவன் என்று கேட்கின்றான்.அந்த இவன் பெற்றோரைப் பிரிந்த அக்குழந்தையைப் பலவகையிலும் காத்து வளர்த்தவன். அதனால் அக் குழந்தை சினந்து தன் கையில் இருந்த குத்துவாளை அக்காவலன் மேல் எறிகின்றது.அவ்வாள் அவன் வாயைக் கிழிக்க இரத்தம் பீறிடுகின்றது. இதன் உத்தி என்ன? தன்னைக் காத்த இந்நல்லவனை அக்காவலன் குற்றப் படுத்துகின்றானே என்று குற்றஞ் சொன்ன அந்த வாயைக் குத்தியது குழந்தை. இந்தத் திரையுத்தி பழைய இலக்கியவுத்தியின் மீட்சியாகும்.
தருகெனத் தந்து தன்முன் வைப்பக் கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே
என்பது சிலப்பதிகாரம், தன் கணவன் கோவலனைக் கள்வன் எனவும் அவனைக் கொல்லுகஎனவும் பொய்க்குற்றஞ் சாட்டிய பாண்டியனின் அத்தீவாய் தெறிக்கும்படி கண்ணகியின் சிலம்புமணி தாக்கிற்று என்பர் இளங்கோவடிகள். பொய் சொன்ன வாயைக் கிழி என்பது உலகப் பேச்சு.
'அழியாச் சுடர்' என்பது மெளனி கதைகளுள் ஒன்று. “கற்பனையின் எல்லைக்கோட்டில் நின்று வார்த்தைகளுக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக் கூடியவர் மெளனி ஒருவரே” என்று பாராட்டுவர் அவருக்கு நிகரான புதுமைப்பித்தன். கோயிலில் ஒன்பது