பக்கம்:இலக்கியத் தூதர்கள்- பாலூர் கண்ணப்பமுதலியார்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


இங்ஙனம் அன்னம் கூறக் கேட்ட நளன் அன்னத்தை நோக்கி “நீ எவ்வாறேனும் தமயந்தியை எனக்கு மணம் முடித்து வைக்கவும்” என்று வேண்டினான். அன்னமும் நளன்பால் விடை கொண்டு தமயந்தி வாழ் விதர்ப்ப நாடு சென்றது.

அன்னம் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் நளன் அன்னத்தின் போக்கைப்பற்றிப் பலவாறு நினைக்கலுற்றவனாய், “அன்னம் இந்த நேரத்திற்குள் விதர்ப்ப தேசத்தை அடைந்திருக்குமா? இந்த நேரத்திற்குள் தமயந்தியைக் கண்டிருக்குமா? இந்த நேரத்திற்குள் நான் தமயந்தியினிடம் கொண்டுள்ள அன்பைப்பற்றிச் சொல்லியிருக்குமா? இந்த நேரத்திற்குள் திரும்பி வருடமா?” என்று எண்ணிக்கொண்டிருந்தான். இது நிற்க,

சென்ற அன்னம் விதர்ப்ப தேசத்துக் குண்டினபுரச் சோலையை அணுகியது. அச்சோலையில் மலர்கள் கண்களைக் கவரும் நிலையில் மலர்ந்திருந்தமையின், அவற்றைப் பறிக்கத் தமயந்தி அங்கு வந்து சேர்ந்தனள். அன்னமும் தமயந்தியைக் கண்டு அவள் அருகே சென்றது. தமயந்தி தன் அருகு. வந்துற்ற அன்னத்தைக் கண்டு தனியே அதனை அழைத்துச் சென்று “அன்னமே! இங்கு என்னை நாடி வந்தமைக்குக் காரணம் யாது?” என்று வினவினாள். அதுபோது அன்னம் நளனது பெருமையினைக் கூறத் தொடங்கியது.

அன்னம் தமயந்தியை நோக்கி, “ தமயந்தி! நான் தேவர்களிடும் கட்டளையினைக் கூடச் செய்ய