பக்கம்:இலக்கியத் தூதர்கள்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அணிந்துரை

இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட சங்ககாலம் முதல் இக்காலம் வரை எழுந்த அருந்தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் தூதர்களைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. தமிழில் ‘தூது’ என்னும் வகையைச் சார்ந்த சிற்றிலக்கியங்களும் பலவுள. தெயவப் புலவராகிய திருவள்ளுவர் தம் நூலில் தூதின் இலக்கணத்தைச் திறம்பட வகுத்துரைக்கின்றார். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டே ‘இலக்கியத் தூதர்கள்’ என்னும் இச்சிறிய நூலை உருவாக்கினேன். இந்நூலில் காதல் குறித்துச் செல்லும் அகத்துறைத் தூதரும், போர்குறித்துச் செல்லும் புறத்துறைத் தூதரும் ஆகிய இருவகைத் தூதரையும் காணலாம்.

இந்நூல் வெளிவருவதற்குச் சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழக ஆட்சியாளரும் தமிழ்நூற் காவலருமாகிய திருவாளர் வ. சுப்பையா பிள்ளையவர்கள் காட்டிய கருணைத்திறன் பெரிதும் பாராட்டுதற்குரியது. அச்சிடத் தொடங்கி இரண்டாண்டுகட்குப் பின் இந்நூல் நிறைவுறுகிறது. நீண்ட காலத்தாழ்வுக்குரிய காரணம் பொருந்தாத நெறியிற் சென்ற எனது திருந்தாத அறிவே. எனினும் எனது நலத்தில் பெரிதும் கருத்துடைய கழக ஆட்சியாளரவர்கள் என்னை நன்னெறிப்படுத்தி யாட்கொண்டு மீண்டும் என் எழுத்துப் பணிக்கு ஊக்கமும் உரனும் ஊட்டியதன் விளைவாகவே இந்நூல் வெளிவரலாயிற்று. ஆதலின் கழக ஆட்சியாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை யவர்கட்கு யான் பெரிதும் கடப்பாடுடையேன்.