இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்
27
இதை நாம் மிகவும் முக்கியக் குறிப்பாகக் கொள்ள வேண்டும்.
பணத்தையும் உடம்பையும் செலவு செய்வது, அழித்துக் கொள்வது என்பது தவறான காரியமல்ல. தேவையான காரியமே!
இருக்கிறதையெல்லாம் செலவழித்துவிட்டு, இல்லாத வறுமை நிலைக்குக் கொண்டு வருவதையே கொடுமை என்கிறோம். மடமை என்கிறோம்.
ஒளவையின் உபதேசம்
உடலையும் பொருளையும் அழித்து விட்டால், என்னென்ன இழப்புகள் உண்டு என்பதை நல்வழி எனும் பாடல் தொகுப்பில் பாடிக் காட்டிய ஒளவை, அதற்கு மாறாக ஒரு வரியில் ஒரு பாடலைப் பாடி நமக்கு நல்ல வழியைக் காட்டியிருக்கின்றார்.
கொன்றை வேந்தன் எனும் பாடல் தொகுப்பில் வருகிற பாடல் இது.
'தேடாது அழிக்கின் பாடாய் முடியும்’
அழிக்க நமக்கு உரிமை உண்டு. அடிக்கடி ஏற்படுகிற தேவையும் அவசியமும் உண்டு. அதுபோலவே, செலவழித்த சக்தியை, பொருளை, மீண்டும் திரட்டிச் சேர்த்துக் கொள்ள வேண்டாமா?
செலவு செய்வது உரிமை என்றால், சேர்த்துக் கொள்வது நம் கடமை அல்லவா! உரிமைக்குக் குரல் எழுப்பி விட்டு, கடமைக்கு செயல்படாது கை விரித்து விட்டால், உடல் குடம் காலியாகி விடாதா? உடம்பு திடமிழந்து போகாதா? பொருள் இருக்கும் பெட்டி வெறும் பெட்டி ஆகாதா?