பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொலன்னறுவை

103

னறுவையே தலைநகரமாயிற்று. இந்த நகரத்துக்குச் சனநாதபுரம் என்ற புதிய பெயரை வழங்கிச் சோழ ஆட்சி பீடமாக்கினான் இராஜேந்திர சோழன். அந்தக் காலத்தில் பொலன்னறுவையில் இரண்டு சிவாலயங்களைக் கட்டியிருக்கிறார்கள்; ஒன்று முழுவதும் கல்லால் அமைந்தது; இன்றும் மேல் விமானமும் உள்ளே சிவலிங்கமும் வெளியே நந்தியும் இருப்பதைக் காணலாம். இங்கே கிடைத்த செப்பு விக்கிரகங்களைக் கொழும்புக் காட்சிச் சாலையில் வைத்திருக்கிறார்கள்.

நாங்கள் முதலில் விருந்தினர் விடுதிக்கு அருகில் உள்ள ஒரு பாழடைந்த மண்டபத்தைப் பார்த்தோம். அது இங்கே அரசாண்ட நிச்சங்க மல்லளென்னும் அரசனுடைய ஆஸ்தான மண்டபம் இருந்த இடமாம். இப்போது இங்கே வெறும் அஸ்திவாரம் மட்டுந்தான் இருக்கிறது. இது பராக்கிரம சமுத்திரத்தின் கரையைச் சார்ந்தே அமைந்துள்ளது. மற்றச் சின்னங்கள் விடுதிக்குக் கிழக்கே பரந்து கிடக்கின்றன. அவற்றுக்கும் விடுதிக்கும் இடையே மோட்டார் போகும் சாலை இருக்கிறது. அந்தச் சாலையைத் தாண்டி நாங்கள் சென்றோம்.

லங்கா திலகம் என்ற பெயருடைய புத்தர் ஆலயத்துக்குச் சென்றோம். அதை இப்போது ஜேதவன ஆராமம் என்று சொல்கிறார்கள். அங்கே 170 அடி உயரமுள்ள செங்கற் சுவர்கள் நிற்கின்றன. மேற் பகுதிகளெல்லாம் இடிந்து போயின; வெறும் சுவர்களே இருக்கின்றன. இங்கே ஒரு பிரம்மாண்டமான புத்தர் திருவுருவம் நின்ற கோலத்திலே உள்ளது. சுதையினால் ஆன திருவுருவம் அது. கட்டிடத்தின்