பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4
பத்தினித் தெய்வம்

“இதுதான் கண்ணகியின் திருவுருவம்!” என்று நண்பர் சுப்பிரமணியன் சுட்டிக் காட்டினார்.

முன்னாலே நின்ற திருவுருவத்தைப் பார்த்தேன். துடியிடை யென்று கவியிலே சொல்வதைச் சிற்பி உலோகத்திலே வடித்திருந்தான். ஆலிலை வயிறு என்பதன் பொருள் அந்த அற்புத விக்கிரகத்தைப் பார்த்தபோது நன்றாக விளங்கியது. தலையில் கூந்தல் மேல்நோக்கிய கொண்டையாகக் கட்டியிருந்தது; ஒரு வகைத் திருமுடி வைத்தாற் போல அழகாக இருந்தது.

பெண்களின் உருவத்தை ஓவியமாகவும் சிற்ப உருவமாகவும் மிகவும் அழகாகப் பழங் கலைஞர்கள் வடித்திருக்கிருர்கள். அந்தத் திருவுருவங்களில் கூந்தலைக் கொண்டை போட்ட கோலத்தில் அமைத்திருப்பார்கள், குழலை ஐந்து வகையாகக் கொண்டை போடுவார்களாம். குழல், அளகம், கொண்டை, பனிச்சை, துஞ்சை என அந்த ஐந்து வகைகளையும் வழங்குவார்கள். இதனால் கூந்தலுக்கு ஐம்பால் என்று பெயர் உண்டாயிற்று. இந்தக் காலத்தில் ஓவியர்கள் எழுதும் பெண்களின் படங்களில் கூந்தலை விரித்துப் போட்டிருப்பதாகக் காட்டுகிறார்கள்! அவர்களுக்கு அது அழகாகப் படுகிறது. ரவிவர்மாவே அப்படித் தீட்டியிருக்கிறார்.

3