பக்கம்:இலங்கைக் காட்சிகள்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இலங்கைக் காட்சிகள்

கண்ணகியின் காதுகள் தாழ்ந்திருந்தன. திருநெல்வேலியில் இன்றும் சிலர் கனமான அணிகளைக் காதிலே இட்டு வளர்த்திருப்பார்கள். அந்த அணிகள் காதில் ஊசலாடும். பழைய சிற்பங்களில் இந்த வடிகாதைத்தான் காண முடியும். கண்ணகியின் காதுகளும் வடிகாதாக இருந்தன. திருமுகத்தில் சாந்தம் ததும்பியது. கண்ணகி கோபம் ஆறித் தெய்வமாய் நின்ற கோலத்தில் சிற்பி அந்தத் திருவுருவத்தைப் படைத்திருப்பான் என்று தோன்றுகிறது. அந்த உருவத்தில் இரண்டு நகில்களும் இருந்தன.

நம் நாட்டில் கண்ணகியை வழிபடும் இடங்கள் சில உண்டென்றும், அங்கே கண்ணகியை ஒற்றை முலைச்சி, மங்கலாதேவி என்ற பெயர்களால் வழங்குவார்கள் என்றும் என்னுடைய ஆசிரியராகிய மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் சொல்லியிருக்கிறார்கள். கண்ணகியின் திருவுருவத்தின்முன் நின்ற பொழுது அந்த நினைவு வந்தது.

“கண்ணகிக்கு ஒற்றை நகில் என்று சொல்வார்களே! இந்த உருவம் இரண்டு நகில்களோடே இருக்கிறதே; இது கண்ணகியின் உருவந்தான் என்று எப்படித் தெரியும்?” என்று நண்பர் சுப்பிரமணியனைக் கேட்டேன்.

“ஆனந்த குமாரசாமி இதைக் கண்ணகியின் உருவம் என்றே சொன்னார். வேறு அறிஞர்களும் அப்படித்தான் சொல்கிறார்கள்."

“வேறு இடங்களில் கண்ணகியின் திருவுருவம் உண்டா?”