14
இலங்கையில் ஒரு வாரம்
2
என் நண்பர் ஒருவரிடம் ஒரு சமயம் ஒரு பழைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். “1935-ம் வருஷத்தில் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்திருந்தார். அச்சமயம் நானும் அவ்விடம் போயிருந்தேன்.......” என்று சொல்லத் தொடங்கினேன்.
உடனே நண்பர் குறுக்கிட்டு, “எந்த வருஷத்தில் போனீர்கள்? 1935-லா 1936-லா?” என்று கேட்டார்.
“1935-ல் தான்!” என்றேன். “எந்த மாதத்தில்?” என்றார்.
“நன்றாய் ஞாபகம் இல்லை. ஆகஸ்டு மாதமாயிருக்கலாம்.”
“ஒரு வருஷம் ஆகஸ்டில் பெரு மழை பெய்தது. அந்த வருஷமா?”
“இருக்கலாம்.”
“எந்த ஊருக்குப் போனீர்கள் ? திருச்செங்கோட்டுக்கா?”
“ஆமாம்.”
“திருச்செங்கோட்டுக்குப் போக எந்த ஸ்டேஷனுக்கு டிக்கெட் வாங்கினீர்கள்!”
“சங்கரிதுர்க்கம் ஸ்டேஷனுக்கு!”
“அப்போதெல்லாம் ரயிலில் நீங்கள் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வது வழக்கமா? இரண்டாம் வகுப்பிலா?”
“கிடைத்த வகுப்பில்!”
“சென்னையிலிருந்து சங்கரிதுர்க்கத்துக்கு டிக்கெட் விகிதம் என்ன ?”
“சுமார்.......”