பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

இலங்கையில் ஒரு வாரம்

பான்மை எழுதப் படிக்கத் தெரியாத ஏழைத் தொழிலாளர்களுக்கு அசாத்தியமான காரியம்.

படிக்கத் தெரிந்தவர்களும் உலகம் அறிந்தவர்களுமான மனிதர்களுக்குத் தற்காலிகமாக இலங்கை போய்விட்டு வருவதற்குரிய பத்திரங்களைப் பூர்த்தி செய்து, அதிகாரிகள் கேட்கிற கேள்விகளுக்குப் பதில் சொல்லி, நிபந்தனைகளை நிறைவேற்றிவிட்டுப் போய் வருவது பிரம்மப் பிரயத்தனமாயிருக்கிறது.

எழுதப் படிக்கத் தெரியாத தோட்டத் தொழிலாளி ஒருவர் தம்மை இலங்கைப் பிரஜையாகப் பதிவு செய்து கொள்வதற்காகப் பூர்த்தி செய்ய வேண்டிய பாரங்களைப் பார்த்தால் நாம் மூர்ச்சை போட்டு விழுந்துவிடுவோம். அதற்குரிய இதர தஸ்தவேஜுகளைக் கொண்டு வரும்படி சொன்னால் வேண்டாம்! “வேண்டாம்! எங்களுக்குப் பிரஜா உரிமையே வேண்டாம்! சும்மா விட்டால் போதும்!” என்று கதறுவோம்.

அவ்வளவு பயங்கரமான சோதனையை இந்தியத் தொழிலாளிகளுக்கு இலங்கை சர்க்கார் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தச் சோதனையில் அவர்கள் தேறுவதற்காகப் பெருமுயற்சி புரிந்துவரும் சில தலைவர்களை இலங்கையிலுள்ள இந்திய மக்கள் பெற்றிருக்கிறார்கள். இது அவர்களுடைய பாக்கியம்.

இத்தகைய இந்தியத் தலைவர்களில் சிலரை இலங்கையில் நான் சந்தித்தேன். ஸ்ரீ ராஜலிங்கம், ஸ்ரீ தொண்டைமான், ஸ்ரீ குமாரவேல், ஸ்ரீ சுப்பையா, ஸ்ரீ சோம சுந்தரம், ஜனாப் அஸீஸ் ஆகியவர்களைப் பார்த்துப் பேசினேன்.