பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

இலங்கையில் ஒரு வாரம்

வந்தார்கள்; பிறகு டச்சுக்காரர் வந்தார்கள். இந்த இரு சாராரையும் எடுத்து விழுங்கக்கூடிய ஜான்புல் கடைசியாக வந்து சேர்ந்தார். ஜான்புல் பல வருஷ காலம் ஆட்சி செலுத்திவிட்டுத் தனக்குச் சரியான வார்ஸு சிங்களவர்கள் தான் - அதிலும் கனம் சேனநாயகாதான்–என்று தீர்மானித்து, அவருடைய கையில் இலங்கா ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். எனவே விபீஷண ஆழ்வார் தூங்கி எழுந்ததும் முழி முழி என்று முழிக்கும்படி நேர்ந்தது. இராஜ்யம் கையை விட்டுப் போனதில் விபீஷணருக்கு ஒரு மாதிரி சந்தோஷந்தான். எனவே “வாழ்க தூக்கம்” என்று கோஷித்து விட்டு, இலங்கையில் இனி சாதாரண பிரஜையாக வாழ்வது என்று தீர்மானித்தார். இங்கேதான் அவருக்குச் சங்கடங்கள் பல ஏற்பட்டன.

பிரஜா உரிமைப் பதிவு அதிகாரியிடம் சென்று “என்னை இலங்கையின் பிரஜையாகப் பதிவு செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். அதிகாரி அவரிடம் ஒரு கத்தை நமுனாக்களைக் கொடுத்துப் பூர்த்தி செய்து தரச்சொன்னார். விபீஷண ஆழ்வார் அந்த நமுனாக்களைப் பார்த்துவிட்டுத் திறுதிறு வென்று விழித்தார்.

“எழுதப் படிக்கத் தெரியாதா?” என்று அதிகாரி கேட்டார்.

“தெரியும் ; ஆனால் நான் பள்ளிக்கூடத்தில் படித்த காலத்தில் எழுத்துக்கள் வேறு விதமாயிருந்தன. ஆகையால் அதிகாரி அவர்களே நமுனாக்களைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்!”

அதிகாரி கருணைகூர்ந்து விபீஷணரைக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்.