பக்கம்:இலங்கையில் ஒரு வாரம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கல்கி

79

திருக்கேதீசுவரம் ஆலயம் இருந்த இடத்தில் வேறொரு புதிய ஆலயத்தை நிர்மாணிப்பதற்குப் பெரும் பிரயத்தனம் ஒன்று இலங்கையில் தொடங்கியிருக்கிறார்கள். இந்த முயற்சிக்குப் பிரபல இலங்கை இந்தியர்களின் ஆதரவு இருக்கிறது. எந்த இடத்தில் புதிய ஆலயத்தை நிர்மாணிக்கலாம் என்றும், எப்படி அதை நிர்மாணிக்கலாம் என்றும் யோசனைகள் நடந்துவருகின்றன. இதற்காகத் தமிழ் நாட்டிலிருந்து ஆலய நிர்மாண ஆராய்ச்சி நிபுணரான ஸ்ரீ வி. எம். நரசிம்மன் யோசனை சொல்ல அழைக்கப்பட்டுப் போயிருக்கிறார் என்று அறிந்து மகிழ்கிறேன். இந்த ஸ்ரீ வி. எம். நரசிம்மன் இக்காலத் தமிழர்கள் கம்பரைப் படித்துத் தெரிந்து கொள்ள உதவுமாறு உரையுடன் கம்பராமாயணத்தைப் பதிப்பித்த ஸ்ரீ வை. மு. கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்களின் புதல்வர். ஆலயச் சிற்பங்களைப்பற்றி நன்கு ஆராய்ச்சி செய்து பல அரிய கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கட்டிட நிர்மாணத் துறையில், அவருடைய புலமையைக் குறிக்கும் பல இந்திய — ஆங்கிலப் பட்டங்கள் பெற்றவர் ஸ்ரீ நரஸிம்மன், B.A., B.E. A. M.I.E., M.R. San. I (Lon) அவர்கள் இலங்கைக்குச் சென்று திருக்கேதீசுவர ஆலயத்தைப் புதுப்பிக்க உதவி புரிவது தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் உள்ள நீடித்த கலாச்சார உறவை மறுபடியும் புதுப்பித்து நிலைநிறுத்தி உறுதிப் படுத்துவதாகும்.

தாய்நாட்டில் உள்ளவர்கள் சேய் நாட்டுக்குப் போய்ப் பார்க்கும்போது அங்கே காணும் நல்ல அம்சங்களைக் கவனித்துக்கொண்டு வருவதுதான் நியாயம். நல்ல-