பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


திராவிடர் கழகம்


சேலத்திலே, 27-ஆந்தேதி நடைபெற்ற மாநாட்டிலே, தெ.இ.ந.உ.சங்கத்திற்குத் திராவிடர் கழகம் என்ற புதுப்பெயரும், பட்டம் பதவிகளை விட்டொழித்துவிட்டு, நாடு மீளவும் கேடுதீரவும் பணிபுரியும் அணிவகுப்பினை அமைக்கும் திட்டமும், உணர்ச்சியும் வேகமும் கொண்ட பல்லாயிரக்கணக்கான திராவிடத்தீரர்கள் ஆதரவைப் பெற்றுவிட்டன. வெற்றிகரமாக நடந்தேறிய அம்மாநாடு வெறும் வைபவமென்றோ, ஒரு குழுவின் வெற்றியென்றோ நாம் கருதவில்லை; ஒரு இயக்கவளர்ச்சியிலே முக்கியமான, குறிப்பிடத்தக்க ஒரு கட்டம் என்றே கருதுகிறோம். தீவிரமான திட்டங்களை நிறைவேற்றிவிட்டது, மனத் திருப்திக்காக அல்ல! திட்டங்களைத்தீட்டிவிட்டு, எட்டிநிற்போராக இருப்பவர்களைப் பற்றிக் கவலையில்லை. அத்தகையவர்க்ளுக்குத் திட்டங்களைப்பற்றியும் கவலையில்லை. ஆனால், கஷ்டநஷ்டம் ஏற்கும் துணிவுடன் அன்று அங்குக் கூடிய வீரர்கள் கூட்டம் விரும்புவது, விடுதலைப்போரினையேயாகும்! விவேகசிந்தாமணிக்கு விளக்கவுரையாற்றும் காரியத்திலோ, அரசியல் தந்திரங்களுக்கு அட்டவணை தயாரிக்கும் வேலையிலோ, அந்த அஞ்சா நெஞ்சு படைத்த ஆயிரமாயிரம் தோழர்களுக்கு அக்கறை கிடையாது. அவர்கள், பட்டம் பதவி கிட்டுமா என்று பக்குவம் பார்த்துப் பொதுவாழ்வு நடத்தும் பண்பினரல்ல! 'ஒரு பெரிய பண்டைப் பெருமை வாய்ந்த இனம் பாழாகிவிடுவதா, உலகவரலாற்று ஏடுகளிலே இடம்பெற்ற ஒருநாடு உதவாக்கரைகளுக்கு உலவுமிடமாவதா, இந்நிலையை மாற்றப் போரிடாது ஆண்மையாளர் என்ற பெயரைத்தாங்குவதா?' என்ற தீ உள்ளே கொழுந்துவிட்டெரியும் கோலத்துடன் கூடிய அந்த வீரர்கள் விரும்புவது, உரிமை! ஆம்! திராவிடநாடு திராவிடருக்கே என்ற உரிமையைத்தான் அவர்கள் விரும்பு-