பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

இலட்சிய வரலாறு


கின்றனர். அந்தக் கண்கள் காட்டிய ஒளி, அவர்கள் அன்று கிளப்பிய ஒலி, தோள்தட்டி மார்நிமிர்த்தி அணிவகுத்து நின்ற காட்சி, ஒருஇனத்தின் ஏழுச்சியின் அறிகுறியாக, விடுதலைப்படையின் எக்காளமாக, மூலத்தை உணர்ந்தோரின் முழக்கமாக இருந்ததேயன்றிக் காருண்யமுள்ள சர்க்காருக்கு வாழ்த்துக்கூறிக் கனதனவான்களுக்கு நமஸ்காரம் செலுத்திச் சீமான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் சேதி கூறிடும் சிங்காரக் கூட்டமாக இல்லை. இதனை நாடு அறிதல் வேண்டும்; நாமும் மனதிலே பதியவைத்துக் கொள்ளவேண்டும்.

ஆளும் கூட்டத்தாரால் அலட்சியப்படுத்தப்பட்டு, மாற்றுக் கட்சிகளால் கேலிசெய்யப்பட்டு, ஆரியர்களால் அவமதிக்கப்பட்டு, வடநாட்டவரால் வாட்டப்பட்டு, மண் இழந்து மானம் இழந்து, பொருளைப் பறிகொடுத்து, மருளைத் துணைக்கழைத்து, மார்க்கமின்றி மமதையாளரிடம் மண்டியிட்டுக் கிடக்கும் ஒரு இனம், அன்று, "விடுதலை பெற்றுத் தீரவேண்டும், அதற்காக நான் உழைப்பேன்! உயிர் அளிப்பேன்! இடையே இன்பம் என்ற பெயரிலே எதுவரினுங்கூட மயங்கிடேன்; போரிடுவேன்! பெற்றால் வெற்றிமாலை, இல்லையேல் சாவு ஓலை!" என்று பெரியதோர் சூள் உரைத்த சூரர்கள் கூட்டம் அது.

வழக்கமாகக் கூடி, வசீகரமாகப் பேசி, வளையாது குனியாது வாய்வீரம் காட்டிவிட்டு, வாகை சூடியதாக மனப்பால் குடித்துவிட்டுத் தோகையர் புடைசூழப் போக பூமிக்குச் செல்லும் சுகபோகிகளின் கூட்டம் அல்ல! வறுமையின் இயல்பைத் தெரிந்தவர்களின் கூட்டம்! பசியும் பட்டினியும் எப்படி இருக்கும் என்பதை அறிந்தவர்கள்! பாட்டாளிகள்! ஆனால் பார்ப்பனீயத்தின் பாதத்தைத் தாங்கும் ஏமாளிகளல்ல, அந்தப் பார்ப்பனீயத்தை மத-சமுதாயத் துறைகளிலேயே முறியடிக்காமலேயே பட்டத்தரசராகிவிடமுடியும் என்று கருதும் கோமாளிகளல்ல, ஊருக்கு உழைத்து உருமாறிக் கிடக்கும் உத்தமர்கள் கூடினர் அன்று! உறுதியை வெளிப்படுத்தினர், ஊராள்வோரின் உளமும் உணரும் விதத்திலே. பட்டம் பதவிக்காகவே கொட்டாவி விட்டுக்கிடக்கும் கட்சி என்றிருந்த பழிச்சொல்லை அன்று