பக்கம்:இலட்சிய வரலாறு, அண்ணாதுரை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. என் அண்ணாதுரை

7


திராவிடம் : இன்று

திராவிட மன்னர்கள் மறைந்தனர்; மக்கள் பண்பை மறந்தனர்.

வீரம் கருகிவிட்டது! வீணருக்கு ஆதிக்கம் ஏற்பட்டது.

திராவிடக் கலைக்கும், மொழிகட்கும் மதிப்பு இல்லை.

திராவிடத்தொழில் வளம் தூங்குகிறது. திராவிடன் தேம்புகிறான்.

திராவிடச் செல்வம் கோயிலில், கொடிமரத்தில், கொட்டுமுழக்கில், வெட்டிவேலையில், வெளிநாட்டில் சென்று முடங்கிவிட்டது.

திராவிடன், தேயிலை-கரும்பு-ரப்பர் தோட்டக் காடுகளில் கூலியாய் வதைகிறான்.

திராவிட நாட்டிலே, மூலை முடுக்கிகளிலெல்லாம் மார்வாடிக் கடைகள், குஜராத்திகளின் கிடங்குகள், முல்தானியின் முகாம்கள், சேட்களின் கம்பெனிகள்.

பெரிய வியாபாரங்களெல்லாம் வட நாட்டாரிடம்.

தொழிற்சாலைகளிலே, துரைமார்கள் இல்லை- — பனியாக்கள்!

டால்மியாவுக்கு்த் திருச்சிக்குப் பக்கத்திலே நகரமே இருக்கிறது.

ஆஷர் சேட்களுக்குத் திருப்பூர்- கோவை வட்டாரத்தில் ஆலை அரசர்கள் எல்லாம் கட்டியம் கூறவேண்டிய நிலைமை.

சென்னையிலே சௌகார் பேட்டை இருக்கிறது- பாரத் பாங்க் இருக்கிறது.

தினம் ஒலிக்கும் மணி, ஒருவடநாட்டுக் கோயங்கா உடையது.

சென்னையில், பெரிய கட்டிடங்கள் இன்று வடநாட்டாருக்குச் சொந்தம்!