பக்கம்:இல்லம்தோறும் இதயங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



112 ★ இல்லம்தோறும் இதயங்கள்


மணிமேகலை பெட்டியைப் பற்றிக்கொண்டு, பையனைப் பார்த்தாள். அவனைக் காணோம். இப்போது தான் டிரஸ் பண்ணிவிட்டேன். எங்கே? எங்கே?...

ஜெயராஜ் அவள் பரபரப்புக்குப் பதில் கொடுத்தான்.

“வசந்தி எடுத்துட்டுப் போயிட்டாள். என் பிள்ளை அங்கெல்லாம் வரமாட்டான்.”

மணிமேகலை நிதானித்தாள். ‘பிள்ளையை கொடுய்யா...’ என்று ஏகவசனத்தில் கேட்கலாமா? வேண்டாம். அங்கே நிலைமை எப்படியோ? இவனாவது—இந்தத் தொடர்பாவது—இங்கே இருக்கட்டும்.”

மணிமேகலை சூட்கேஸுடன் நிமிர்ந்துகொண்டே, பாமாவைப் பார்த்து “பாமா! அந்த புளியமரம் வரைக்கும் வர்றியா?” என்று சொல்லிக்கொண்டே திரும்பிப் பாராமல் நடந்தாள். இந்திரா, “அண்ணி! அண்ணி!” என்று கதறுவது கேட்காததுபோல் மனதைக் கல்லாக்கிக் கொண்டு நடந்தாள். திரும்பினால் அழுகை வரும். இவர்கள் முன்னால் அழக்கூடாது. கூடாது!

தன் வழியே நடந்துகொண்டிருந்த அவள் இன்னொரு நிழலும் தன் நிழலோடு இணைவதைப் பார்த்துத் திரும்பினாள். பாமா!

“பாமா! ஒன்கிட்ட கேட்க வேண்டியது என் கடமை என்கிறதுனால கேட்கிறேன். பழைய காதலை ஞாபகப் படுத்தல. இங்க... ஒனக்கு ஒங்க அம்மா பேசுவது புரிஞ்சிருக்கும். ஒன் மனச தெரிஞ்சிக்கலாமா?”

பாமா முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டே “பெரியவங்களோட இஷ்டம். அவர்களா பார்த்து, என்ன பண்ணுனாலும் எனக்குச் சம்மதம்தான். அப்புறம் எனக்கு ஒரு சின்ன உதவி செய்யணும்.”