14. அன்னை நெஞ்சம்
அன்னையின் நெஞ்சம், தூயது: தீயது சிறிதும் கலவாதது: தன்னலம் அற்றது: பொதுநலம் உற்றது: உலகெல்லாம் இனிது வாழவேண்டும் என்னும் இயல்பிலே ஊறியது.
தமிழுக்குச் சிறப்புத் தருவது பொருள் இலக்கணம். அதில் தனிச் சிறப்புடையது அகப்பொருள். அவ்வகப்பொருளில் தாய்க்குரிய இடம் அளவால் சிறியது; ஆனால் அருமையால் பெரியது: கடுகு சிறுத்தாலும் காரம் போகாதது போல.
அன்னை, அகப்பொருளில் நற்றாய் எனப்படுவாள். இந் நாளில் நல்லம்மை, நல்லம்மாள், நல்லாத்தாள், நல்லாயி என அன்னை வழங்கப்பெறுதல் பண்டை வழக்கத்தின் முத்திரைகளே.
6
நெஞ்சின் ஓட்டம், சொல்லால் புலப்படும். ஆதலால், நெஞ்சின் ஊர்தி சொல்லாகும். சொற்குதிரை மேல் நெஞ்சம் உலாவருவதே கவிதை, கதை, காவியம், கட்டுரை, நாடகம் என்பவை. இதனைத் தெளிவாக உணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார். அகப்பொருள் உறுப்பினர் நெஞ்சப் பான்மையைக் கூற்றுவகையால் விளக்கினார். சங்கச் சான்றோர் அதனைப் போற்றி ஒழுகினார்.
ஒரு தாய். இரவுப்பொழுதில், தன் மகள் வீட்டின் புறத்தே போய் நிற்கக் காண்கிறாள். ஓர் ஆண் மகனையும் ஆங்குக் காண்கிறாள்: அன்னை கண்டு கொண்டாள் என்பதை அறிந்து கொண்ட மகள், அச்சமும் நாணமும் அலைக்க, மெல்ல மறைந்து இல்லுள் நுழைகிறாள். தாய் தலை நிமிர்ந்து பார்த்தாள்: மகள் தலைகவிழ்ந்தாள்; அத்தகவுடைய தாய், 'நீ மிகவும் நல்லவள் என்று சொல்லி நகைத்துக் கொண்டு போய்விட்டாள்.
தாயின் நெஞ்சம் தனிப்பெரு நெஞ்சம். இணையில்லா இரக்க நெஞ்சம். இடித்துரைக்க வில்லை: ஏசவில்லை: உரைக் கூட்டவில்லை: உதறி எறியவில்லை: சொன்னவாய் மணக்க