வாழ்வியல் வளம்
51
பேர்களின் அறிவும் ஆற்றலும் உழைப்பும்? ஊக்கமும் வளமும் வழிகாட்டலும் பயன்படுகின்றன அவர்களையெல்லாம் நினைத்து நன்றியறியச் செய்வது வரலாற்றுத் தேர்ச்சியேயாம். அதனால் தான்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே- இதை
வந்தனை கூறி மனதில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ-இதை
வந்தே மாதரம் வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?”
என்று நாட்டு வணக்கம் பாடினார் பாரதியார்.
சரித்திரத் தேர்ச்சி கொள்வதால் நன்றியறிதல் மட்டுமா நமக்கு உண்டாகும்! சரித்திரத்தில் தமக்கென இடம்பெற்ற மக்களைப் போல் 'நாமும் வாழ்ந்து காட்ட வேண்டும்' என்னும் வீரவழிபாடு தானே உண்டாகி விடுதல் இயற்கையாகும்.
இளம் பருவத்திலே காந்தியடிகளார் பார்த்த அரிச்சந்திரன் நாடகம் அவரை என்ன செய்தது! வாய்மைக்குக் காந்தியடிகளே என்று வையகமே ஏற்றுப் போற்றும் படியான வாழ்வை அது தந்து விடவில்லையா? வாய்மைக்கு உரைகல்லாக விளங்கும் ‘சத்திய சோதனை' என்னும் வாழ்வியல் நூலை உலகுக்கு அது வழங்கிவிடவில்லையா?
இளம் பருவத்தில் மராட்டிய மன்னன் சிவாசி, தன் அன்னை வழியாகவும் ஆசிரியர் வழியாகவும் அறிந்த சரித்திரங்கள் தாமே அவனை அரிமாவைப் போலக் கிளரச் செய்து விடுதலை வீரனாக்கின!
எதிலும் உரிமை! எங்கும் உரிமை! என்று நாம் இன்று முழங்குகிறோம்! விடுதலை விடுதலை எனக் கட்டவிழ்த்துக் களிநடம் புரியவும் செய்கிறோம்! பேச்சுரிமை எழுத்துரிமை வாக்குரிமை வாய்ப்புரிமை வழிபாட்டுரிமை எனப் பலவும் கொள்கிறோம்! ஆனால் அந்த உரிமைகள் எளிதில் நமக்கு வாய்த்தவையா? அவற்றுக்காக நம் முன்னோரால் கொடுக்கப்