தமிழர் வாழ்வியல் இலக்கணம்
93
பகைப் பிரிவாவது, நாட்டுக்குப் பகைவரால் உண்டாகிய கேட்டை
ஒழிக்கக் களஞ் செல்லும் பிரிவு.
தூதாவது, வழிமொழிதல்; ஆள்வோரால் சொல்லப்பட்டது எதுவோ அதனை மறவாது மாறாது சொல்லும் வகையால் சொல்லி நலம் செய்தலாகும்.
பொருள் வயின் பிரிதல், குடிமை நலம் காக்கவும், அறப்பணி புரியவும் வேண்டும் ஆக்கம் தேடற்குப் பிரிதலாகும்.
மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னைத் தமிழர் கொண்ட இப் பிரிவு வகைகளை அறிவியல் வளர்ந்த இந் நாளின் பிரிவுகளொடு எண்ணிப் பார்ப்பின் புதுமை ஏதேனும் உண்டோ?
அயல் மாநிலம் செல்வாரும், அயல் நாடு செல்வாரும் எண்ணிப் பார்க்கலாமே!
தெரிவு
இந் நாளில் அயலகம் செல்வதற்குத் தக்கார் எனத் தெரிவு செய்யப்படுவார் இலரா? இவ்வாறே இப்பிரிவுகளுக்குத் தக்காராகத் தெரிவு செய்தமை அறிய வாய்க்கின்றது.
பகைதணி வினைக்குச் செல்வார் அரசின் ஆணை வழிதானே
செல்வர்!
தூது என்பதும் அரசின் ஆணை வழி நிகழ்வதுதானே!
அவ்வாறே ஓதல் என்பதும் அரசின் ஆணை வழிப்பட்டது; ஆகலின், உடன் எண்ணினார். இம் மூவருள், ஓதற்குச் செல்வாரையும் தூதிற்குச் செல்வாரையும் தனித்து நோக்கி விடுத்தலை ஆள்வோர் கடமையாகக் கொண்டனர்.
"மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்" ஆதலாலும், "அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்” ஆதலாலும், ஆள்வோன் அத் துறைகளில் மேம்பட்டு நிற்பாரைக் கண்டு அத்தொழிற்கு ஏவுவான். அவ்வாறு காண்பனோ எனின்,
“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறெய்தி உள்ளப் படும்
என்பது வள்ளுவம்.
ஆதலால் தக்கோனைத் தெரிந்து ஏவுதல் அவற்கு இயல்பாகும்.
(665)
மற்றும், “ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்” என்பதால் ஒற்றறிதல் வகையாலும் காண்பானாம் (581).