236
66
இளங்குமரனார் தமிழ்வளம் - 19
‘ஊ என்பது தசையை உணர்த்தி நின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க” என்கிறார் (உயிர். 67). இவ்வாறு காலவழக்கு இடவழக்கு ஆகியவற்றைச் சுட்டுதலை யும் இவர் வழக்காகக் காணலாம்.
மாட்டின் விளைவு
‘மாட்டு’ என்பதோர் இலக்கணத்தைத் தொல்காப்பியர் செய்யுளிய லில் கூறுகின்றார். ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைப்பார் போல அவ்விலக்கணம் கொண்டு நச்சினார்க்கினியர் மாட்டிச் செல்லும் தனிச் செலவில் அவர்க்கு ஒப்ப ஒருவர் இதுகாறும் இருந்தார் இலர். அம் மாட்டுரையே, முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை முதலியவற்றுக்கு மறைமலையடிகளாரைப் புத்துரை காண ஏவிற்று. நெடுநல்வாடை, முருகாற்றுப்படை ஆகியவற்றுக்குக் கோதண்டபாணியாரை நயவுரை காணத் தூண்டிற்று! இவருரையில் அமைந்துள்ள சில நூற்பாக்களின் பொருட்போக்கே நாவலர் பாரதியாரைத் தொல்காப்பியப் புத்துரை காண அழுத்திற்று. இவையும் நச்சினார்க்கினியர் கொடையெனின் கொள்ளத் தக்கவாம்.
"ஒன்றே யாயினும் தனித்தமிழ் உண்டோ?" என்னும் சாமிநாத தேசிகர் உரையே, "தனித்தமிழ் இயக்கம்”காண எதிரிடைத் தூண்டல் ஆயிற்று அல்லவோ! எதிரிடைப் பயனும் ஏற்புடைப் பயனாதல், எண்ணுவார் எண்ணத் திண்மையும் எழுச்சிச் செயற்பாடும் பற்றியவை. மற்றையரோ நீரில் கரைந்த மண்ணாகி நெளிந்து போய்விடுவர்.