சொல்லதிகார இயலமைதி
சொல்லதிகாரம் கிளவியாக்கம் (சொல்லாக்கம்) முதலாக எச்சவியல் இறுதியாக ஒன்பது இயல்களை உடையது. அவ்வியல்கள் முறையே கிளவியாக்கம், வேற்றுமைஇயல், வேற்றுமை மயங்கியல், விளிமரபு, பெயரியல், வினையியல், இடையியல், உரியியல், எச்சவியல் என்பன. இவை ஒன்றற் கொன்று தொடரிபோல் - சங்கிலிபோல்-தொடர்புடையன.
சொல்
சொல் என்பது பொருளுணர்த்தும் கருவி; மாந்தர் தம் நெஞ்ச ஊர்தி; உலகத்தை நெருக்கி வைக்க வல்ல இயக்கி.
சொல் என்பது மாந்தர்தம் குறிப்பு உணர்த்துவதற்கும் தேவை நிறைவேற்றத்திற்கும் தம் பட்டறிவால் இயற்கையின் துணை கொண்டு படைக்கப்பட் க்கப்பட்ட செய்நேர்த்தியுடையது.
சொல்லின் ஆற்றல் பெரிது. “ஆவதும் சொல்லால்; அழிவதும் சொல்லால்” என்பது பழமொழி.
சொல் ஆக்கத்திற்கே அன்றி அழிவுக்கும் ஆதலுண்டு என்பதே அதற்குக் ‘கூற்று' என்றொரு பெயரைத் தந்தது கூறுபடுத்துவது அழிப்பது கூற்றெனப்படுதல் அறியத்தக்கது.
சொல் எதுவும் பொருளற்றதில்லை என்பது தொல்காப்பியர் தெளிவு. அதனால்,
“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே”
என்றார் (640).
அப்பொருள் பார்த்த அளவில் புலப்படல் உண்டு. ஆழ்ந்து பார்த்து அதன்பின் கண்டு கொள்ளத்தக்கனவும் உண்டு என்பதால்,
"மொழிப் பொருட் காரணம் விழிப்பத்தோன்றா
என்றார் (877).
நெல்
மணி இல்லாத நெல்லை ‘நெல்' என்பது வழக்கில்லை. பதர், பதடி என்பனவே வழக்கு.