பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. கல்வியின் உறைப்பு

'பள்ளிப்படிப்பு வெம்பி வீழ்ந்தது. அதனால் யான் கல்வி பயிலத் தொடங்கினேன். முதன்முதல் எனக்குக் கல்விக்கண் திறந்தவர் யாழ்ப்பாணம் நா. கதிரைவேற் பிள்ளை” என்று கல்வியைத் தொடங்குகிறார் திரு.வி.க.

கதிரைவேலர்.

கதிரைவேலர் தமிழ்த்தொண்டு சென்னையில் எங்கெங்கு நடக்குமோ அங்கெங்கெல்லாம் சென்று தமிழ் விருந்துண்டார் திரு.வி.க. அவர் சொன்மாரி வெள்ளத்தில் இலக்கியம் இலக்கணம் தருக்கம் மெய்ப்பொருள் எல்லாம் எல்லாம் தேங்கும். அவர் பொழிவு பொழிவாக மட்டும் அமையாது? கலைக்கழகமாகவே அமையும். கதிரைவேலர் வேனில் விடுமுறையில் சிந்தாதிரிப் பேட்டையில் தங்கினார். திரு.வி.கவுக்கு யாப்பிலக்கணம் கற்பித்தார். அவ்விலக்கணம் மட்டுமே விடுமுறையை விழுங்கியது. கதிரைவேலர் நீலமலை சென்றார்; ஆங்கேயே வெஞ்சுரத்துப் பட்டு இறையடி எய்தினார். துன்பக் கடலில் வீழ்ந்து அதனைக் கடந்தேறப் பன்னெடு நாட்களாயின திரு. வி.க. வுக்கு!

சுவாமிநாத பண்டிதர்

கதிரைவேலரிடம் கற்றவர் பிறரிடம் பாடம் கேட்பதில்லை என்ற உறுதியில் பலர் இருந்தனர். திரு. வி. க. மனம் அவர் கூட்டில் சேர ஒருப்படவில்லை. யாழ்ப்பாணம் சுவாமிநாதபண்டிதர் சென்னையில் தங்கியிருந்தார். அவரிடம் சின்னாள் பழகியபின் அவர் நீர் என் நண்பராக இரும்; மாணாக்கராக இராதேயும் என்று வரம்பிட்டு நின்றார்.? சோமசுந்தரநாயகர் இயற்றிய நூல்களைத் தனியே பயின்றார். சபாபதி நாவலர் நூல்களையும் பயின்றார். அப்பயிற்சி முறையாகத் தமிழ் பயில வேண்டும் என்னும் காதலை அவர்க்கு எழுப்பின சூரியனார் கோயில் துறவியார் ஒருவர் சென்னையில் இருந்தார். திரு.வி.க. அவரிடம் தமிழ் பயிலச் சென்றார். அவர், உமக்குத் தீக்கையாகியிருக்கிறதா? என்றார் ;.