5. எப்பொருளும் ஆன திருவரங்கர்
("உடன்பிறந்தே கொல்லும் நோய்; உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா" என்று தேர்ந்துரைத்ததும் இந்த மண்தான். "தம்பியை இன்றிக் கிடப்பனோ தமையன் மண்மேல்” என்றதும் இந்த மண்தான். தனித்தனி நாடி பார்த்து முடிவு செய்யும் தமிழ் மருத்துவ முறைப்படி முடிவு செய்ய வேண்டியது இது.)
"தேனமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும் ஆனவர் காண் அம்மானை" எனத் திருவரங்கக் கலம்பகம் பாடும் திருவரங்கர், எப்பொருளும் ஆனவர் என்பதை இவர்க்கும் உறத்தகும்.
"சற்று வழுக்கையுடன் கூடிய கனத்த பெரிய தலை, நீறு விளங்கும் பரந்த நெற்றி; பெரிய கண்கள்; இனிக்க இனிக்கப் பேசும் குறுநகைமுகம்; அகன்ற மார்பு; வெள்ளை உட்சட்டை; இவைகள் எல்லாவற்றிலும் பலவகைக்கடிதக் கட்டுகள் உடையதும், பொத்தான் போடப்படாதுதும் ஆகிய மேற்சட்டை; இடுப்பிற் சுற்றியுள்ள செம்பட்டு, கணுக்காலுக்கு மேற்பட்ட வெள்ளை வேட்டி; ஐந்தடி உயரம்; நிமிர்ந்து எதிர்நோக்கி நடக்கும் வீரநடை” - இவை திருவரங்கரின் ஓவியம்.
திருவரங்கர் ஆர்வம் அடிகளாரைக் கொழும்புக்கு அழைத்ததோடு நின்றதோ? அவர்க்கு அணுக்கராகி நிற்கும் அளவில் அமைந்ததோ? இல்லை! இல்லை! அவர் நூல்களைத் தருவித்து விற்கவும், அவர் இயற்றிய நூல்களை வெளியிடுதற்கு ஆகும் வகையில் பொருள் தண்டி விடுக்கவும் ஆக வளர்ந்தது அன்றோ! அம்மட்டோ? அடிகளாரின் நூல்களை விற்று உதவுதற் கென்றே ஒரு விற்பனை நிலையத்தைக் கொழும்பில் தொடங்கவும் அவ் வுள்ளன்பு தூண்டியது. அன்பு என்னதான் செய்யாது?
அரங்கனாரின் கெழுதகை நண்பர்வி. சங்கரநாராயண பிள்ளை என்பார். தம் பெயரையும் அவர் பெயரையும் இணைத்துக்