பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 29.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இளங்குமரனார் தமிழ்வளம் - 29

கி.பி.1865-ஆம் ஆண்டில் கடற்கால் வேலையை மதிப்பிடுமாறு பலநாட்டு வணிகக் கழகப் பிரதிநிதிகளையும் பார்வையாளராக வருமாறு டிலெசெப்சு அழைத்தார். அவ்வழைப்பை ஏற்றுப் பல்வேறு நாடுகளில் இருந்தும் 100 பேர்கள் வந்தனர். நிறை வேறியுள்ள வேலையை நேரில் கண்டு மிகப் பாராட்டினர்.வேலை மேலும் விரைந்து நடக்க அவர்கள் பாராட்டு ஊக்கமளித்தது.

செங்கடலில் இருந்தும், நடுக்கடலில் இருந்தும் வெட்டிக் கொண்டு வரப்பெற்ற கால்வாய்கள் இரண்டும் ஒன்றை ஒன்று இணையும் நிலையை அடைந்தது. இரண்டு கால்வாய்களையும் இணைக்கும் நிகழ்ச்சி பெருவிழாவாகவே நடைபெற்றது.முதற்கண் மண்தோண்டும் விழாவைத் தொடங்கிய டிலெசெப்சே கடற்கால் களை இணைக்கும் கடைசி மண்ணை வெட்டி எடுக்கும் உயர் பொறுப்பை நிறைவேற்றினார். "செயற்கரிய செய்த செம்மல் டிலெசெப்சு வாழ்க” என்னும் வாழ்த்துதல் ஒலிக்கிடையே, உலக ஒருமைப் பாட்டுத் திட்டம் முழுமை பெற்றது.

எத்தகைய அரிய முயற்சி இது? உலகங்காணாத உயரிய முயற்சி இது! அம்முயற்சியால் உலகம் அடைந்துள்ள நன்மை இவ்வளவா, அவ்வளவா? இவற்றுக்கெல்லாம் காரணமாக இருந்த அனைவரும் உலகோர் உள்ளத்தில் என்றும் பசுமையாக இருப்பர் என்பது உண்மை!