7. சூயசுக் கடற்கால் திறப்பு விழாவைப்
பற்றி எழுதுக.
காடு கழனிகளில் விதைத்த உழவன், விளைவு கைவரப் பெறும்போது எத்துணை மகிழ்வு எய்துவான்! வறுமைக்கும் வாழ்வுப் போராட்டத்திற்கும் ஆட்பட்டுக் கற்றுத்தேறிய ஒருவன் உயர்நிலைப்பதவி ஒன்று எய்தப் பெருங்கால் எத்தகு மகிழ்வு எய்துவான்! இத்தகு நிலைகளினும் உயர்ந்த உவகை கொண்டனர் ஓருலகச் சாதனையாம் சூயசுத் திட்டம் நிறைவேறிய போழ்து. ஆகவே சூயசுக் கடற்கால் இணைப்பு நிறைவு விழாவை உலக விழாவாகவே கொண்டாடி உலகோர் உவகை பூத்தனர்.
கி.பி.1869-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 17-ம் நாள் ஒரு நன்னாள்! பலகோடி மக்களின் பன்னூற்றாண்டுக் கனவுகள் நனவாகிய இணையற்ற பொன்னாள். அந்நாளே சூயசுக் கடற்கால் பெருவிழா நாளாகும்.
எகிப்து மன்னர் இணையில்லா மகிழ்வால் எல்லா நாடு களுக்கும் அழைப்பு விடுத்தார். அன்பர்கள் அரசியல் தலைவர்கள், வாணிகப் பெருமக்கள், அறிஞர்கள், கலைஞர்கள் ஆகிய அனைவரும் உலக விழாவைக் காணச் சூயசுக் கடற்காலின் இருபக்கங்களிலும் முதல் நாள் மாலைப் பொழுதிலேயே நிரம்பி வழிந்தனர்! உள்நாட்டுப்பொதுமக்கள் ஈட்டத்தைக் கூறவேண்டுமா! இருகரைகளிலும் நூறு கல் நீளத்திற்கும் இடமின்றிச் செறிந்து நின்றனர்.
போர்க் கப்பல்கள், வாணிகக் கலங்கள், வண்ணப்படகுகள் ஆயன அணிவகுத்து நின்றன. "இந்நாட்டைச் சேர்ந்த மிதப்பு இது" என்பதைப் பட்டொளி வீசிப் பறக்கும் கொடிகள் பளிச் சிட்டுக் காட்டின. 17-ஆம் நாள் காலை 11 மணிக்கும் குண்டுகள் முழங்கக் கொடிகள் பறக்கக் கப்பல்கள் சயீத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டன. ஒரு கப்பலா? இருகப்பலா? அணிவகுப்பில்