7. உண்ணாமை வேண்டும் புலாஅல்
புலவு விற்பனையாளர் அவர்.
புலவு விற்பனை கொலை இன்றி நிகழுமமா?
உயிரிகளைத் துள்ளத் துடிக்கக் கொல்வதும், துண்டு துண்டு ஆக்குவதும், தூக்கிலே போட்டுக் களிப்பதும், தூக்கி நிறுத்து விற்பதும், விற்ற காசு கொண்டு கொலைப் பொருள் வாங்கி, விலைப்பொருள்செய்தலும் வாடிக்கையாகிப் போய் விட்ட அவர் தம் நாள் வழிக் கடமை!
அதிலே அவர்க்கு வெறுப்பு உண்டானால், விருப்பொடும் ஈடுபடுவாரா?
ஆனால் அவர்தம் அன்பு மருமகள்! இளமைப் பைங்கிளி!
கூர்த்த மூளைக் கொழுமையள்! உள்ளத்துருக்க உருவம் ஆனவள்.
தெய்வப் புலவர் திருக்குறள் மேல் பற்றுமை கொண்டாள். திருக்குரான் இருக்கத் திருக்குறள் ஏன் என அப்புலவுக் கடையினர் புகன்றார் அல்லர்! அந்த அளவில் உள்ளம் அமைந்தது பேறு! செல்வி படித்தாள்! குறளை முகந்து முகந்து தேனாகக் குடித்தாள்!
பாடம்! பாடம்! மனப்பாடம்.
"அதிகாரம் 26. "புலால் மறுத்தல்" அன்று தொட்டாள்!
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?"
(251)
சிந்தித்தாள்! சிந்தித்தாள்! சிக்கல் பெரிதாயிற்று!
தன்னூள் பெருக்க - தான் பிறிதூன் உண்ணவா?
ஊனைப் பெருக்க - ஊனை உண்ணவா?
உயிரை வளர்க்க - உயிர்க் கொலையா?
திகைத்துத் திகைத்து மேலே சென்றாள். ஏழாம் குறள்: