வாழ்வியல் வழிநடை
25
மலருள் புகுந்து இசைபாடித் தேனெடுக்கும் ஈயும் உண்டு; மலத்துள் புகுந்து பண்ணிசைத்து உண்ணும் ஈயும் உண்டு; மக்களுக்கு ஊட்டந்தரும் தேன் தருவது முன்னதன் வேலை; இத்தகைய இருவகை ஈக்களையும் போல்பவர்கள் உலகில் உளர் அல்லவா! முதல் வகையைச் சேர்ந்தவன் முன்னவனாம் தந்தை; இரண்டாம் வகையைச் சேர்ந்தவர் பின்னவராம் மக்கள்!
"பன்றியின் முன் மணியைப் போட்டால் பயன்படுமா? என்பது பழமொழி. நல்லுரை கேட்டு நடப்பது நன்னெஞ்சிற்கு யலும்; ஆயின் புன்னெஞ்சிற்குப் பொருந்துமா? தந்தை நிற்கும் இடம் நாடிச் சென்றார் அருள் மிக்க புலவர் ஒருவர்; புல்லாற்றூரில் பிறந்தவர்; எயிற்றியனார் என்னும் பெயரினர்.
'வேந்தே' என்றார் விரைந்து சென்ற புலவர். புலமையாளர் களை வரவேற்றுப் போற்றுதலில் இணையற்ற அவ்வேந்தனாம் தந்தை போர்ச் சின்னத்தை ஒரு பக்கம் போக்கிப் புன்முறுவல் மிகுந்து நல்லுரை கூறி வரவேற்றான். கைவேலைக் கடிதில் எறிந்து மெய் தழுவி இன்புற்றான்.
"புலவர் பேசினார் : அரசே! அன்புகனிய அகம் குழைய நீ எடுத்து மகிழ்ந்த மக்கள் இவர்; ஆசைப் பெருக்கால் உச்சி முகர்ந்து உவகை உரைக்க வளர்ந்தவர் இவர்; கன்னல் பாகோ, கனிச்சாறோ, கவின் தேனோ, களி மதுவோ என்று மயங்க மழலை பொழிந்தவர் இவர்; மலரிலாச் சோலையும், மதியிலா வானமும், நீராடுந் துறையிலாக் குளமும், மணமிலா மாலையும் போன்றது புதல்வரைப் பெறாத வாழ்வு எனத் தேர்ந்த உன்னால் "அன்பே! ஆருயிரே! கண்ணே! கண்ணின் மணியே!" என்றெல்லாம் போற்றப் பெற்றவர் இவர்! ஆனால் இன்றோ எதிர் எதிர் நின்று போரிட உள்ளீர்! தந்தை உரிமையை அணுவும் நினைத்தாரல்லர் இவர்; நீயும் மக்களென உளங் கொண்டாயில்லை. உன்னை எதிர்த்து நிற்குமாறு அவர்களது பண்பும் உறவும் பட்டறிவும் துணைபோகலாம்; உன் பண்பும் உறவும் பட்டறிவும் அவர்களை எதிர்க்கத் துணைபோகலாமா?
"சோழர் குடியில் வந்த உங்களுக்கு ஒரொரு கால் பாண்டியரும் சேரரும் பகைவராயிருந்துள்ளர். ஆனால் இன்று நீ போரிட முனைந்து நிற்பது சேரிடமோ பாண்டியரிடமோ இல்லை; சோழரிடம் - இல்லை - உன் மக்களிடம்?"
வெற்றியும் தோல்வியும் இப்பொழுதே தெரியுமா? நீ வெற்றி பெறுவாய் என்றே முடிவு கொள்வோம்; வென்று,