27. அறிவும் அழிவும்
அறமாவது எது?
“மனத்துக்கண் மாசிலன் ஆதல்-அறம்”, என்பது வள்ளுவம்.
அறிவாவது எது?
"அறிவு அற்றம் காக்கும் கருவி” அதாவது அழிவு வராமல் காக்கின்ற கருவி என்பது வள்ளுவம். அவ்வாறானால் மாசமைந்த மனம் அறமுடையதாகாது. அழிவுடைய அழிவாக்குகின்ற அறிவு அறிவாவாகாது என்பது இவற்றால் விளங்கும்.
-
அதனால் தான் நன்மகப்பேற்றை நயக்கும் வள்ளுவர், “அறிவறிந்த மக்கட்பேறு” வேண்டும் என்றும், "பழிபிறங்காப் பண்புடை மக்கட்பேறு" வேண்டும் என்னும் மக்கட் பேற்றில் கூறுகிறார்.
அறிவிலாப் பண்போ, ஆக்கம் செய்யாது.
பண்பிலா அறிவே, படுகேடு செய்யத் தவறாது. ஆதலால், அறிவும் பண்பும் ஒருங்கமைந்த பேறே பேறு என்றார். கல்வியைப் பின்னே கூறும் போதும், கசடு இல்லாத கல்வி என்றே குறிக்கிறார்.
கற்றபடி நிற்கவே கற்க வேண்டும் என்றும் அங்கேயே குறிப்பிடுகிறார்.
அறிவுடைமையிலே, பிற உயிர்கள் உடையும் துயரைத் தம் துயராகக் கொள்ளல் அறிவுடைமைக்குச் சான்று என்பதைக் குறிக்கும் முகத்தால்,
"அறிவினால் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை’
என்கிறார்.
(315)
ஆனால், அறிவுலகத்தின் மாமணிகள் என்று சொல்லிக் கொள்ளும் நாடுகளின் அறிவுக் கூர்மை எப்படி உள்ளது?