2. இறை நிலை
திருவள்ளுவர்க்கு முன்னரே தமிழ் மண்ணில் கடவுள் வழிபாடும், வழிபாட்டு முறையும் உண்டாகி விட்டன.
கொடிநிலை, கந்தழி, வள்ளி என்னும் மூன்றும் கடவுள் வாழ்த்தொடு பொருந்தி வரும் என நால்வகை வாழ்த்துகளை ஆசிரியர் தொல்காப்பியர் கூறினார்.
அவர் காலத்திலேயே 'தேவபாணி' என்னும் இசைப்பாவை உண்டாகி விட்டது. பரிபாடல் என்பதோ பெரிதும் இறை வழிபாட்டுப் பாடலாகவே அமைந்து விட்டது.
சங்கத் தொகை நூல்களில் நீலமணிமிடற்றோன், மால், சேயோன், மாயோன், கண்ணன், பலராமன், வேந்தன், வண்ணன், கொற்றவை இன்ன தெய்வப் பெயர்களும் வழிபாடுகளும் உருக்கொண்டு விட்டன.
மெய்யியல் கொள்கைகள் விளக்கமுற அமைந்து விட்டன. நில்லாதவை இவை என்பதும் நிலைபேறு ஆனவை இவை என்பதும் எண்ணப்பட்டன. அவ்வகையில் 'காஞ்சித் திணை என ஒரு திணையே உருவாக்கம் அடைந்து புறப்பொருளில் இடம்பெற்றது. போர்த் துறையில் பெருங்கடனாற்றிய வீறு மிக்கவன் நடு கல்லாகிப் பீடும் பெயரும் எழுதப் பட்டுப் படையலிட்டு வழிபடப்பட்டான்.
வேற்படையாகிய கருவி வழிபாடும், வேலன் வெறியாடலும் பெரு வழக்காக ஆயின.
'இல்லுறை தெய்வம்' என முந்தையர் வழிபாடும் கிளர்ந்தது. கோயிலும் கோட்டமும் விளங்கின.
"பசி இல்லாகுக, பிணி சேண் நீங்குக”
"பால் பல ஊறுக, பகடு பல சிறக்க”
"நீ வாழியர், நின் மக்கள் வாழியர்"
"ஆற்று மணலினும், வான்மீனினும் பெருகி வாழ்க!