9. துணை நலம்
தலைவர், துணைத் தலைவர், செயலர், துணைச் செயலர் என்னும் பதவிப் பெயர்கள் பெருக வழங்குகின்றன. தலைவர் செயலர்களினும் 'துணை' எனப்படுவார் அடுத்துச் சற்றே குறைந்த பதவியராக எண்ணவும் படுகின்றார். இவ்வெண்ணம் பொது வாழ்வில் பெருக்கமாக நிலவுவதால் 'துணை' என்பதைத் தாழ்வாகக் கருதும் கருத்தாளர் உருவாயினர்.
துணைக்குத் தாழ்வுப் பொருள் கொள்ள வள்ளுவம் கற்றார் அறியார். துணை, ஒப்புப் பொருளது. இணை என்பது போல, பிணை என்பது போல ஒப்புப் பொருளதே.
துணை என்பதற்கு ஒப்புப் பொருள் பாராது, தாழ்வுப் பொருள் பார்க்கும் பார்வையால், திருவள்ளுவர் பெண்ணைத் தாழ்த்தினார் எனப் பெண் பிறவியரும் பேசும் நிலைமை காலக் கேட்டாலும் கருத்துக் கேட்டாலும் உண்டாகியது.
கடவுள் துணை, இறைவன் துணை, அன்பே துணை என்னும் போது தாழ்வுப் பார்வை உண்டா?
பெரியாரைத் துணைக் கோடல் என்பதில் தாழ்வுப்
பார்வைக்கு இடமுண்டா?
"துணையோடல்லது நெடுவழிபோகேல்'
என்பது
போலவோ "நெஞ்சத் துணை” என்பது போலவோ வழங்கும் வழக்குகளில் தாழ்வு நிலை உண்டோ?
"தொண்டலால் துணையும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே” என்பதில் துணை தாழுமா?
உள்ளத்தில் ஒரு நோக்கு வைத்துக் கொண்டு அதனைக் காணும் காட்சியில் ஓடவிட்டால், அவ்வுள்ள நோக்குத் தானே தலை நீட்டும்!
திருவள்ளுவர் “வாழ்க்கைத் துணை நலம்" என்றாரே அன்றித் 'துணைவி நலம்' என்றாரா? 'துணைவன் நலம்' என்றாவது சொன்னாரா?