திருக்குறள் நோக்கு
இத்திசை இந்நாளில் செல்க!
இத்திசை இந்நாளில் செல்லற்க!
207
இத்திசையில் இந்நாள் செல்ல இது செய்தல் தடை நீக்கம்! (பரிகாரம்)
இத்திசை இவ்விந்நாள்களில் எதிரீடு (சூலம்)
என்றெல்லாம் இடனறிதலில் உரைத்தாரா?
திருவள்ளுவர் பெயரால் எத்தனை எத்தனை சோதிட நிலையங்கள்! ஞானவெட்டியான் முதலாய நூல்கள்! முப்பால் எழுதிய திருவள்ளுவர் அப்பால் எழுதிய நூல்களா இவை?
திருவள்ளுவர் பெயரால் ஊர், தெரு, மன்றம், நூல், அறக்கட்டளை, சிலை, கோட்டம், சாலை என்பவை இருத்தலை நினைத்துப் பூரிப்படைகிறோம்!
அவர் அதிகாரக் கணக்கில் 133 அடி உயரச்சிலை நீலத்திரைக் கடல் ஓரத்திலே நிற்க இருப்பதறிந்து மகிழ்கிறோம்!
பிஞ்சுக் குழந்தைகள் மழலை வாய்முதல், பெருமூதாளர் பொக்கை வாய் வரை குறளமுதம் வெளிப்படல் கண்டு திளைக்கிறோம்.
அதே பொழுதில்,
"திருக்குறளா நடைமுறைக்கு ஒத்துவராத நூல்” என்று
பழிக்கும் உதவாக்கடைகளையும்,
"திருக்குறளா பெண்மையைப் பழிக்கும் நூல்" என்னும் ஆய்வுக் குறையர்களையும்,
"திருவள்ளுவர் சிலையா? திறக்க விடோம்!”
என்னும் சுருக்கப் பார்வையரையும் நினைத்துப் புண் படுகிறோம். இப்புண்பாடு போலவே புண்படுத்தும் ஒன்றும் உண்டு.
கணியம் பெரும்பாலும் தன்னம்பிக்கையைப் போக்கி நாள்கோள் நம்பிக்கையை ஆக்கி வைப்பதாகவே உள்ளது. மக்கள் உறுதிப்பாட்டை உலைத்துக், காலக்கழிவை ஆக்கிப் பணப்பறிப்பு வேலையெனவே பெரும்பாலும் நிகழ்கின்றது.