வள்ளுவமும் வாழ்வியலும்
7
“நான் என் ஆறாந்திங்களிலேயே 'நலமா' எனக் கேட்கத் தொடங்கி விட்டேன்; ஒன்றாம் அகவை ஆகும்போதே நடக்கத் தொடங்கிவிட்டேன்" என்னும் அவர், "பிப்ரவரித் திங்கள் வந்தது; அதனுடன் எனக்கு நோயும் வந்தது; படுத்துவிட்டேன்; என் கண்களையும் காதுகளையும் கெடுத்துவிட்ட நோய் அது.
புதிதாகப் பிறந்த குழந்தைபோல் நினைவற்றுக் கிடந்தேன். வயிற்றிலும், மூளையிலும் அடைப்பு உண்டாகிவிட்டது. காய்ச்சல் கடுமையாக வாட்டியது.
நான் பிழைக்கவே மாட்டேன் என்ற நிலைமை வந்து விட்டது. ஆனால் ஒரு நாள் எதிர்பாராமல் காய்ச்சல் இறங்கி விட்டது.
இதைக் கண்டு என் குடும்பத்தார் மகிழ்ந்தனர். 'எனக்கு இனிக்கண் திறவாது; காது கேளாது' என்று அவர்களில் எவருக்கும் தெரியாது. ஏன்? மருத்துவருக்குக் கூடத் தெரியாது!” என்று தம் நிலைமையைக் குறிப்பிடுகிறார் கெலன்கெல்லர்
ஒன்றரை அகவையிலேயே கண் குருடாகி, காது செவிடாகி, வாயும் ஊமையாகியவர் அவர். 'வாழ்வே இருண்டுவிட்டது' என்று அவரை அறிந்தவர்கள் முடிவு செய்து விட்டனர்! ஆனால், அவரும் அவர் குடும்பத்தவரும் முயற்சியைக் கைவிட்டனர் அல்லர்!
விழியிழந்தோர் பள்ளிக்குச் சென்றார் கெலன். குமரி சல்லிவனார் ஆசிரியர்; அவரும் விழியிழந்தோரே, உணர்வுடன் கற்பித்தார்; உணர்வுடன் கெலன் கற்றார். நுண்ணிய இசை யையும் கேட்டார்; அரிய கருத்துகளையும் எழுதினார். மார்க்கு டுவெய்ன் ஆசிரியரால், "இந்நூற்றாண்டின் (பத்தொன்பதாம் நூற்றாண்டின்) பெரியவர் என்று பாராட்டத் தக்கவர் இருவர். அவர் நெப்போலியனும், கெலன் கெல்லரும் ஆவர்" என்று பாராட்டப் பெற்றார்
உலக வரலாற்றில் உறுப்புக்குறையர் எத்துணை எத்துணைப் பேர்கள்? அவர்களும் உறுப்புக் குறையிலாரினும் விஞ்சியவராய் வெற்றி வாழ்வினராய் இலங்கிவர்கள் எத்துணையர்?
வள்ளுவப் பார்வை வையகப் பார்வை; வளப்பார்வை; வாழ்வாங்கு வாழவைக்கும் பார்வை; "நீ நினைத்தால் முனைப்பாக நினைத்தால் உன் உறுப்புக்குறை ஒரு குறையா?