24. இணைப்பொறுப்பு
விடு
-
விடுதல் விடுதல் விடுதலை.
விடு - வீடு.
வெளியுலகத் துன்ப துயரங்கள் விடுதலை பெற்ற 'இன்ப நிலையம்' விடு. "வீட்டுக்கு வெளியே நிற்க வேண்டிய உலகம் வேறு; வீட்டுக்கு உள்ளே வர வேண்டிய உலகம் வேறு; வீட்டுக்கு வளியே நிற்க வேண்டிய உலகம் வீட்டுக்குள் வரத் தொடங்கினால், அன்பான மனங்களில் அல்லல் புகுந்து விடும்” என்பார் அறிஞர் மு.வ.
வெளியே நிற்க வேண்டிய உலகம், சமயம், சாதி, கட்சி, தொழில், அரசியல், நட்பு இன்னவை.
உள்ளே வரவேண்டிய உலகம் அன்பு, அருள், அமைதி, பொறுமை, அறம், இன்சொல் இன்னவை.
நாம் திருக்கோயிலுள் சென்றால், காலணியைக் கழற்றி விடுகிறோமே. அப்படி வீட்டுக்கு வெளியே கழற்றி விட வேண்டியவற்றை அப்படிக் கழற்றி விடாமல் கொண்டு வருதலால், 'குடிமை' கொண்டுள்ள கேடு மிகப்பெரிதாம்!
குடும்ப அமைதியைக் கட்டுக் குலைத்துப் பாழாக்கிய கொடுமை, வரவேண்டாதவற்றை வீட்டுக்குள் வரவிட்டதால் ஏற்பட்டு வருவதாம்.
பெரும்பாலான வீடுகள் இதுகால் அமைதியை இழந்து விட்டன! இன்ப நிலையமாம் இல்லம், துன்பவிளை நிலம் ஆய்விட்டன. “வரவேற்பு அறையிலே களிப்பு: சமையல் அறையிலே கண்ணீர்” என்னும் இரட்டைப்போலிமை வாழ்வு, இயற்கையாகி விட்டதே என்னும் அச்சம், எண்ணுவார் உள்ளத்தில் அழுத்தவே செய்கின்றது.
இற்றை நாள் நிலை இது!
வள்ளுவர் நாள் நிலை, வீட்டில் அமைதி இருந்தது; தேவைச்சுருக்கம், மக்கட் சுருக்கம், பரபரப்பு ஆடம்பரம்