ஒரு நூல்
10. சமய ஒப்பு
“சமயக் கணக்கர் மதிவழி கூறா(து)
உலகியல் கூறிப் பொருளிது என்ற வள்ளுவன்”!
என்கிறது. அதே நூல்
“மாறுகொண் டறையு மதிநூல் கடல்கிளர்
சமயக் கணக்கர் தம்திறம் கடந்து”
நிற்பது என்றும் கூறுகின்றது. இஃதெண்ணத் தக்கது. இறைமைக் கொள்கை: தலைமையும் இயக்கமும்
கடவுள் வாழ்த்து என்னும் பெயர், முதல் அதிகாரப் பெயராக உள்ளமை எவ்வகையாலும், பொருந்தாது. 'புதல்வரைப் பெறுதல்' என்பது பொருந்தாது என எவ்வாறு விலக்கப்பட்டு ‘மக்கட்பேறு' என ஆளப்பட்டதோ, அவ்வாறே ‘இறைவணக்கம்’ என ஆளத்தக்கதாம். ஏன் எனில், 'இறை'யும் 'வணக்க’மும் அங்கு உண்மையால் என்க.
றைவன் என ஆளப்பட்டதும் ஒருவகை நூன்முறை வாய்ப்பாட்டாலேயேயாம். செல்வம், வளமை, அழகு, பொலிவு என்பவற்றைத் 'திரு,' 'செய்யாள்' என்றும், மூடிச்சோர்ந்து கிடத்தலை ‘முகடி', 'தௌவை' என்னும் உடலினின்று உயிர் பிரிதலைக் ‘கூற்று' என்றும் இன்னவாறு வழங்குவது போல், தலைமை (முதன்மை)த் தன்மையை இறை, இறைவன் என்றார் திருவள்ளுவர்.
“முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்”
என்றும், இறைகாக்கும், இறைகடியன், இறைவன் செறினும் என்றும் வருவனவற்றை நோக்க அவற்றுக்குத் தலைமை (முதன்மை)ப் பொருள் இருத்தல் வெளிப்படை.